மூக்குடைபடுகிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி - கடுமையாக சாடல்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி போராட்டம் செய்து மூக்குடைபட்டு வருகின்றதென வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமது வங்குரோத்து அரசியலை நிமிர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்பட்டு வந்ததாகவும், இந்த நிலையில் தமது போராட்டங்களை திசை திருப்பி அரசினை திருப்தி படுத்த முயல்வதாகவும் அவர்களால் கடுமையாக சாடப்படுகின்றது.
தேர்தல் வெற்றிக்கு முன்னர் சரிந்து கிடந்த அரசியல் நிலையை மீள கட்டியெழுப்புவதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பயன்படுத்தியும், அவர்களது உணர்வுகளை பயன்படுத்தி வருவதாகவும் கடுமையாக அவர்கள் சாடியுள்ளனர்.
இந்த நிலையில் வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பால் கிளிநொச்சியில் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் போராட்டத்தை குழப்பும் வகையிலும், இலங்கை அரசை திருப்தி படுத்தும் வகையிலும் தற்போது யாழில் குழப்பகரமான போராட்ட சூழலை உருவாக்க முயல்வதாகவும் அவர்களால் சாடப்படுகின்றது.
போலியான அரசியல் தலைமைக்கு வாக்களித்தமையையிட்டு மக்கள் தலைகுனிய வேண்டிய நிலைக்கு அவர்களின் செயற்பாடு தற்போது காணப்படுவதாகவும், சுய இலாப அரசியலுக்காகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் செயற்பாட்டை சிதைக்கும் இவர்களது செயற்பாடு மிகவும் கண்டிக்கப்பட வேண்டியவை.
சக கட்சி உறுப்பினரின் வாக்கை கொள்ளையடித்து வெட்கமின்றி அரசியல் செய்யும் இவர்களை மக்கள் அறிந்து செயற்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.