மக்களை ஏமாற்றி ஆட்சிப்பீடமேறி தோற்றுப்போயுள்ள அரசாங்கமே இது!
நாட்டில் உள்ள குழந்தைகள் தாய்மாருடைய போசாக்கு மட்டம் குறைந்திருக்கிறது, அவர்களுக்குரிய பால் மா மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இந்த கோட்டபாய அரசாங்கம் காணப்படுகின்றது என எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் இந்த அரசு ஒரு தோற்றுப்போன அரசு, அரச தலைவர் பிரதமர் எல்லாரும் தோற்றுப் போய்விட்டார்கள், அமைச்சரவையும் தோற்றுபோனது, அரசில் உள்ளோரும் தோற்று விட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர்கள் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஒரு நாட்டின் அரசானது மக்களின் அத்தியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக செயற்பட வேண்டும் வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்து இந்த மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க முடியாது.
இந்த அரசு திண்டாடுகிறது தேர்தல் காலத்தில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து, தற்பொழுது மக்கள் வாழமுடியாதுள்ளார்கள். குறிப்பாக உணவு பானங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை காணப்படுகின்றது.
அரசுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது. பொதுவாக மக்கள் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுபாடு காணப்படுகிறது. நாட்டுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
ஆனால் வெற்றிகொள்வதற்கு வீர தீரமான அரசு, புத்திசாலித்தனமான அரசு என கூறி தற்பொழுது அரசு பலமில்லாத அரசாங்கமாக மாறியுள்ளது. இந்த அரசு முற்றுமுழுதாக தோற்றுப்போன அரசாங்கம் என்று தான் கூற வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக ஒரு பலமான அரசினை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். குறிப்பாக நமது ஆட்சியில் இனவாதம் மதவாதம் மற்றும் ஒரு துண்டு நிலம் கூட வேறு நாட்டுக்கு கொடுக்காத சிறந்த ஒரு நாட்டினை உருவாக்குவதற்கு அனைவரும் நாங்கள் ஒன்றுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.