யாழ் நகரமெங்கும் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினர்!
யாழ்ப்பாண நகரப் பகுதியில் பெருமளவான காவல்துறையினர் மற்றும் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று யாழ் நகரில் இடம்பெறவுள்ள நிலையில் அதனை எதிர்த்து போராட்டங்கள் நடைத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதால் யாழ்.நகரை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தின் வடமாகாணத்திற்கான நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வில் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனம் செய்து யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு போராட்டத்திற்கு பகிரங்கமான அழைப்பை நேற்று வித்திருந்தன.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

இதனையடுத்து சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிராக யாழ்.மாநகருக்குள் போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற தடையுத்தரவை யாழ்ப்பாணம் காவல்துறையினர் பெற்றிருந்தனர்.
எனினும் இன்று காலை யாழ்.பல்கலைக மாணவர்களால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து யாழ்.மாநகருக்குள் நுழையும் பிரதான மார்க்கங்களை வழிமறித்து கலக தடுப்பு காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர், நீர்த்தாரை வாகனங்கள், மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் தயார் நிலையில் இருந்தனர்.
மாணவர் போராட்டம்

ஆனாலும் பல்கலைகழக மாணவர்களின் போராட்டம் பரமேஸ்வரா சந்தியுடன் முடிவடைந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பிசுபிசுத்தன. எனினும் மேலும் சில தரப்புக்களால் போராட்டங்களுக்கு அழைப்ப விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு தொடர்ந்துள்ளது.








