பயணத்தடைவேளை யாழ்.நகரில் கைவரிசையை காட்டியவர்கள் சிக்கினர்
பயணத் தடை வேளையில் யாழ்நகரில் திருட்டில் ஈடுபட்ட மூவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.நகரப்பகுதிகளில் ஆனைப்பந்தி, நாவலர் வீதி, கோவில் வீதி பகுதிகளில் மூடப்பட்டிருந்த கடைகளை உடைத்து தொலைக்காட்சி, துவிச்சக்கரவண்டி ,மின்சாதன பொருட்கள், விலை உயர்ந்த உணவு பொருட்கள் பிஸ்கட் வகைகள், மற்றும் பால் பைக்கட்டுகள் என 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட நிலையில் குறித்த கடை உரிமையாளர்களினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இன்றைய தினம் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் சட்டநடவடிக்கைக்கு ட்படுத்தப்படவுள்ளார்கள் கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் மற்றும் நாவற்குழி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 20 தொடக்கம் 30 வயதினை உடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விரைவாக கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது