யாழ் நகர மத்தியில் நிகழும் அவலம் : மாநகரசபையின் பாராமுகம்
யாழ் நகரத்தின் மத்தியில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பருத்தித்துறை வீதியின் ஆரம்பப் பகுதியில் உள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் மழைகாலத்தில் அதிகளவு வெள்ளநீர் தேங்கி நிற்கும் வகையில் இந்த வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீதிகளாக இருந்தாலும் நீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்கக் கூடிய பகுதியாக இந்தப் பகுதி காணப்படுவதால் காலம்காலமாக மழைகாலத்தில் வெள்ளநீர் வாய்க்காலை சென்றடைவதில் சிக்கல் இருப்பதால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் மழைக்கு பின்னர் உருவாக்கப்பட்டுள்ள பள்ளங்கள் சரியான முறையில் நிரப்பப்படாமல் அந்த மண் பிரதான் வீதியின் கரையில் மணல் திட்டுக்களாக போடப்பட்டுள்ளன. இது இவ்வாறு இருப்பதால் பாதசாரிகளும் வாகனங்களில் பயணிப்பவர்களும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வீதியின் மறுபக்கத்தில் வாய்க்கால் இருக்கின்ற போதும் ஏன் இந்தப் பள்ளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற கேள்வி எழுவதுடன் இந்தப் பள்ளங்கள் இவ்வளவு காலம் கடந்தும் ஏன் நிரவப்படாமல் உள்ளன என்ற கேள்வியெழுந்துள்ளது.
நகரின் மத்தியில் சன நெரிசல் அதிகமாக உள்ள பகுதியில் இவ்வாறான நிலைமை இருப்பதை பொறுப்பு வாய்ந்தவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை கவனம் செலுத்தாதது ஏன் எனவும் யாரை திருப்திப்படுத்துவதற்காக இது அப்படியே விடப்பட்டிருக்கின்றது. இது தவிர யாழ் மாநகர சபை இதில் கவனம் செலுத்தாதது ஏன்? இந்த வீதியால் பயணிக்கும் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்குவதை அறியவில்லையா என்ற கேள்வியெழுந்துள்ளது.
தேவையற்ற விடயங்களுக்காக மாநகர சபையில் அமர்வுகளில் தங்களது நேரங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் உறுப்பினர்கள் கூட இது தொடர்பில் கரிசனை செலுத்தவில்லை.
நகரசபைகளின் ஆளணியைப் பயன்படுத்தி சரிசெய்யக்கூடிய பிரச்சினை இது. ஆனால் அசமந்தப் போக்கு காரணமாகவும் சார்பு நிலை காரணமாகவும் இவ்வாறு விடப்பட்டுள்ளது.
எம்மிடம் உள்ளூராட்சி மன்றங்களைத் தாருங்கள் ஒவ்வொரு நகரத்தையும் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்போம் என பிரசாரங்கள் செய்து வாக்குகளை வென்றவர்கள் அதனை நிறைவேற்றினார்களா என்ற கேள்வியெழுந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். நகர அபிவிருத்தி அதிகார சபை அல்லது மாநகர சபை இந்த விடயங்களை சரிசெய்து இந்த வீதியில் பயணிக்கக்கூடிய மக்களின் சீரான பயணத்திற்கு இந்த இடத்தை மீண்டும் முதலில் இருந்தது போல் சீர் செய்ய வேண்டும்.
இது குறித்த மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சியில் காண்க ......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |