ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தை தனதாக்கிய ஊடகத்துறை மாணவன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்', இம்முறை ஊடகக் கற்கைகள் துறை மாணவன் வோல்டர் இருதயராஜன் டிலக்ஸனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழா கடந்த 19.02.2025 ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் 22.02.2025 வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.
இதன் இரண்டாம் நாளான 20.02.2025 இன்று நடைபெறும் அமர்வின்போதே, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் டிலக்ஸனுக்கு இந்த மதிப்பார்ந்த தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
அமரர் நிலக்சனும் 'நிலா நிதியமும்'
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் ஊடக மாணவனாகக் கல்வி பயின்று, ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்தவர் சகாதேவன் நிலக்சன்.
இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் (ஆவணி) 01 ஆம் திகதி, அதிகாலை 5 மணியளவில் நடைமுறையிலிருந்த இராணுவ ஊரடங்கு வேளையில், அவரது வீட்டில் வைத்துப் பெற்றோர் முன்னிலையிலேயே ஆயுததாரிகளால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அன்னாரின் ஞாபகார்த்தமாக, அவரது பாடசாலை நண்பர்களான யாழ். இந்துக் கல்லூரியின் 2004 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களால் “நிலா நிதியம்” உருவாக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்குத் தங்கப் பதக்கம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இந்நிதியத்தினூடாக முன்னெடுக்கப்பட்டன.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின்போது, இந்நிதியத்தின் அங்குரார்ப்பணச் சான்றிதழ் யாழ். பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு, அதற்கான நிதியும் பல்கலைக்கழகத்திடம் கையளிக்கப்பட்டது.
இதற்கமைவாகக் கடந்த ஏழு ஆண்டுகளாக இத்தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு மன்னார், விடத்தல்தீவைச் சேர்ந்த செல்வி கிரிஜா அருள்பிரகாசம் இப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
திரைப்படங்கள் மீதான தீராத காதல்
இந்தநிலையில், இம்முறை தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் மாணவன் டிலக்ஸனின் மனப்பதிவு, "நான் வோல்டர் இருதயராஜன் டிலக்ஸன். எனது சொந்த இடம் யாழ்ப்பாணம், மார்ட்டீன் வீதி. சிறு வயதிலிருந்தே திரைப்படங்கள் மீது எனக்கு அதீத ஆர்வம் இருந்தது.
பாடசாலையில் படிக்கும் காலத்தில் வகுப்பறையில் எனக்குப் பிடித்த கதாபாத்திரங்களைப் போல நடித்து ஆசிரியர்களிடம் அடி வாங்கிய அனுபவங்களும் ஏராளம். எனது வாழ்க்கையின் ஒவ்வொரு காலப்பகுதியும் எனக்கு அதிர்ச்சியையும் அதிசயங்களையும் அள்ளித் தந்திருக்கின்றன.
என்னுடைய 8 வயதில், என் வீட்டின் அருகிலேயே எனது தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என் வாழ்வில் என்றும் நீங்காத அதிர்ச்சியாகவே பதிந்துள்ளது. தந்தையை இழந்த காலத்தின் நீட்சி, என் வாழ்க்கையில் பல அனுபவங்களைப் பெற்றுத்தந்த குரூரமான காலம் என்றே சொல்லலாம்.

வாழ்க்கை பற்றிய புரிதல் சிறிதும் இல்லாதவனாய் என் பயணம் தொடர்ந்தது. ஆனாலும், எனது மனதின் அடி ஆழத்தில் திரைப்படங்கள் மீதான தீராத காதல் ஒன்று இருந்துகொண்டே இருந்தது. நான் முன்னர் சொன்னதைப் போலத்தான், அதிர்ச்சியும் அதிசயமும் நிறைந்த என் வாழ்க்கையில் மீண்டும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
உயர்தரத்தில் தொழில்நுட்பப் பிரிவில் முதல் தடவையில் ஒரு பாடத்தில் மட்டுமே சித்தியடைந்த நான், இரண்டாம் தடவை கலைப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் பயின்றபோது எனக்குப் பல்கலைக்கழக வாய்ப்புக் கிடைத்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே என்னுடைய முதல் தேர்வாக அமைந்தது. அங்கு ஊடகக் கற்கைகள் துறையில் திரைப்பட உருவாக்கம் தொடர்பான கற்கை இருப்பதை அறிந்த வேளை, எந்தவிதத் தாமதமும் இன்றி அச்சிறப்புப் பிரிவில் பயின்றே ஆக வேண்டும் என்ற அவா என்னுள் வேரூன்றியது.
ஊடகக் கற்கைகள் துறை
நினைத்தபடியே முதலாம் வருட முடிவில் ஊடகக் கற்கைகளைச் சிறப்புக் கற்கையாகப் பயிலும் வாய்ப்பைப் பெற்றேன். அது என் வாழ்நாளில் நிகழ்ந்த இன்னொரு அதிசயமே.
ஊடகக் கற்கைகள் துறையிலிருந்த பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், துறைத் தலைவர் மற்றும் விரிவுரையாளர் பூங்குழலி ஸ்ரீசங்கீர்த்தனன், விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலன் மற்றும் விரிவுரையாளர் யூட் தினேஸ் கொடுதோர் ஆகியோர் பேராளுமைகளாக நின்று அனைத்து மாணவர்களுடனும் சேர்த்து எனக்கும் வழிகாட்டினர்.

அவர்கள் காட்டிய வழியினூடாகப் பயணித்த எனக்கு, திரைப்பட உருவாக்கம் மட்டுமல்லாது ஊடகக் கற்கைகள் மீதான முழுமையான காதலும் உண்டானது. எனது இளங்கலைமானிக் கற்கைக் காலத்தில் எந்தவிதச் சோர்வுமின்றி முழுமையாக என்னை அர்ப்பணித்துக் கல்வி பயின்றேன்.
அதுவே 'சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த விருது' என்ற இந்தப் பேரதிசயத்தையும் என் வாழ்க்கையில் இணைத்திருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். நான் கல்வி கற்று மேம்பட்ட நிலையை நோக்கிச் செல்ல உதவிய எனது அம்மா, சகோதரர்கள், விரிவுரையாளர்கள், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
அத்தோடு, இந்த மதிப்பார்ந்த விருதை எனக்கு வழங்கிய 'நிலா நிதியம்' குழுமத்திற்கும் நன்றியைச் சொல்லிக்கொண்டு, இன்னும் பல அதிசயங்களைத் தேடிப் பயணிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |