50 ஆண்டுகளை நிறைவு செய்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் (University of Jaffna) ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் பொன் விழா நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வு இன்று (06) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று பொன்னகவைப் பெருவிழா காண்கிறது.
உயர்கல்வி
இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஆறாம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இவ் உயர்கல்வி நிலையம், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக வியாபித்து நிற்கின்றது.
ஐம்பதாவது ஆண்டைக் கடந்திருக்கும் இப்பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டு பீடங்களும் இணைந்து பொன்விழா நிகழ்வை இன்று ஆறாம் திகதி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
பொன் விழா
இந்தநிலையில், காலை 09.00 மணிக்கு ஆரம்பமான பொன் விழா நிகழ்வில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே. எல். வசந்தகுமார ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் ஐம்பது வருடகால கல்விப் பணி வரலாற்றை எடுத்தியம்பும் வகையில் அமைந்த வரலாற்றுப் பொக்கிஷமான “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன் அகவை வரலாறு” எனும் நூலும் மற்றும் பல்கலைக்கழகத்தின் பொன்னகவையை நினைவு கூரும் வகையிலான நினைவு முத்திரை வெளியீடும் இந் நிகழ்வில் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









