யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்து கொலை!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, நேற்று முன்தினம்(19) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காவல்துறை விசாரணை
கணவன் மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிற நிலையில் விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண காவல்துறையினர் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி ஆதாரமும் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொலை
பின்னர் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிரிவி கமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், நேற்றையதினம் திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதன்படி, அவர்களை யாழ்ப்பாணம் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் விரிவுரையாளரான குறித்த பெண், மருமகனின் தாக்குதலின் போது உயிரிழந்த விடயம் தெரிய வந்துள்ளது.
மேலும் உயிரிழந்தவரது சடலத்தை எடுத்து சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த சடலம் எங்கே வீசப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன், அந்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.