மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்
மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று புதன்கிழமை அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் மதிய உணவு இடைவேளையின்போது இந்த அடையாளப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பல்கலைக்கழக மாணவர்களின் உரிமை
இதில் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பங்கேற்று, தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாதைகள் மற்றும் கோச அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல், மாணவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை வசதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், அத்துடன் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன், தற்போது பல்கலைக்கழகங்களில் ஐந்து அணிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், மேலும் இரண்டு அணிகளை உள்வாங்குவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள், விரிவுரை மண்டபங்கள் மற்றும் ஆய்வுகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவில் ஏற்படுத்தப்படாத நிலையில், மேலதிக மாணவர்களை இணைத்துக் கொள்வது உயர்கல்வியின் தரத்தைப் பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்துவதுடன், மாணவர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.




| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |