இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்பு தொடர்பில் அவதானம்
இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து ஜப்பானிய வர்த்தகர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் சடோஷி புஜிமரு (Satoshi Fujimaru) உள்ளிட்ட ஜப்பானிய வர்த்தகர்கள் குழு இன்று (11) அதிபர் அலுவலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தது.
புதிய முதலீட்டு வாய்ப்புகள்
இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா, சுரங்கக் கைத்தொழில், தொழிலாளர் பயிற்சி உட்பட இலங்கையிலுள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்களின் கீழ், புதிய மற்றும் வளர்ந்து வரும் கைத்தொழில்களுக்கு ஏற்றவாறு நாட்டை மாற்றியமைக்கும் வகையில் இலங்கையின் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் சர்வதேச அலுவல்கள் தொடர்பான அதிபரின் பணிப்பாளர் தினுக் கொலம்பகே ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

