ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட பல தகவல்கள்
சர்வதேச நாடுகளின் விருப்பத்திற்கு எமது நாட்டை நிர்வகிக்க இடமளிக்க முடியாது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த நல்லாட்சி காலத்தில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுத்து எதிர்க்கட்சியினரை சிறைக்குள் தள்ளினர்.
இப்போது மனித உரிமை பற்றி பேசும் மனித உரிமை ஆணையாளர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேற்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரின் நற்பெயருக்கு அகௌரவம் ஏற்படுத்தியது நல்லாட்சி அரசாங்கமே.
அது புதியதல்ல. அரசியல் ரீதியான ஆணைக்குழுக்களை உருவாக்கியதும் நல்லாட்சி அரசாங்கமே. அது தவறு என்பதாலேயே 69 லட்சம் வாக்குகளை வழங்கி அந்த நிலையை மாற்றுவதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.
ஜே.ஆர். ஜயவர்தன உருவாக்கிய அரசியலமைப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது என்றனர்.
எனினும் நாட்டுமக்கள் அதற்கான அதிகாரத்தை வழங்கி உள்ளனர். அந்த நிலையில் உலகில் வேறு எந்த நாடும் இலங்கையை நிர்வகிக்க இடமளிக்க முடியாது.
நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்பவேமனித உரிமை ஆணையாளர் செயற்படுகிறார் என்பதை உறுதியாக கூற முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.