மாடியிலிருந்து குதித்து உயிர் மாய்த்த மாணவி..! மறைக்கப்படும் பக்கங்கள் - நீதி வழங்குமா அநுர அரசு
கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட விடயம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசு பொருளாகி உள்ளது.
குறித்த மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்குமாறு குடும்பம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளதுடன், justiceforamshi என்ற வாசகமும் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனது மகளுக்கு நடந்தது உயிரிழந்த போல வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது. எனது மகளின் மரணம் முற்றுப்புள்ளியாக இருக்க கூடாது. நியாயம் கிடைக்க வேண்டும் என மாணவி டில்ஷி அம்ஷிகாவின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடசாலை ஆசிரியர்
கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர் கடந்த மாதம் 29ஆம் திகதி கட்டடமொன்றிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்தார்.
குறித்த சிறுமி ஏற்கனவே கல்வி கற்ற கொழும்பின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்து கடந்த வருடம் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணைகள் தற்போது நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
