வெளிநாட்டுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக நடவடிக்கை
வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேராயர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''இலங்கை கத்தோலிக்க திருச்சபை, வத்திக்கானுடன் இணைந்து, மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒரு நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ளது.
ஆனால் அது பற்றி நாங்கள் இப்போது எதையும் வெளியிட மாட்டோம்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு சர்வதேச உதவியை நாடினால், அதன்மூலம் இலங்கை அனுபவிக்கும் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
நாட்டில் பல்வேறு கைதுகள் இடம்பெற்று வருகிறது. மக்களைக் கைது செய்வதற்கு நாகரீகமான வழிகள் இருக்கின்றன.
அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவது தமது கடமையல்ல என்பதை சட்டமா அதிபர் மற்றும் காவல்துறை மா அதிபருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்'' எனத் தெரிவித்தார்.
