கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : அடையாள அணிவகுப்பில் தப்பிய துப்பாக்கிதாரி
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சமிந்து தில்ஷான் பியுமங்க நீதிமனறத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
பூஸ்ஸ (Boossa) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேக நபர், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை அடையாளம் காண இரண்டு சாட்சிகள் முன்னிலைப்படுத்தப்பட்டனர், ஆனால் அவர்கள் சந்தேக நபரை அடையாளம் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு
பின்னர் சந்தேக நபர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் உத்தியோகபூர்வ அறையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேக நபரை இந்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் சந்தேக நபரை ஸ்கைப் மூலம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவருமான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
நீதிமன்ற விசாரணை
நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 05 ஆம் எண் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சாட்சிக்கூண்டில் நின்ற வேளையில், கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
குற்றவியல் சட்டப் புத்தகத்திற்குள் சூட்சுமமான முறையில் மறைத்து எடுத்து வந்த துப்பாக்கியால் சஞ்சீவவை சுட்டுப் படுகொலை செய்ததுடன், அங்கிருந்து சந்தேக நபர்கள் உடனடியாக தப்பிச்சென்றனர்.
இதற்கு செவ்வந்தி என்ற பெண்ணும் உடந்தையாக செயற்பட்டதுடன், துப்பாக்கி மறைத்து வைத்திருந்த புத்தகத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து வந்ததும் அந்த பெண்தான் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, துப்பாக்கிச் சூட்டினை நடத்திய பிரதான சந்தேகநபர் 8 மணித்தியாலங்களுக்குள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஆனால், இந்த தாக்குதலுக்கு உதவிய இஷாரா செவ்வந்தி எனும் பெண் மாயமான நிலையில் தற்போது வரை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
