காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி : கேள்வியெழுப்பிய சிறீதரன்
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா முன்வந்துள்ள நிலையிலும் இத்துறைமுக அபிவிருத்தி காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணம் என்ன என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய (22.07.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களில் ஒன்றான காங்கேசன்துறை துறைமுகம் போருக்கு முற்பட்ட காலத்தில் மிக சிறப்பாக இயங்கியது.
அந்த துறைமுகத்தை வரத்தக நோக்கத்திற்கான துறைமுகமாக புனரமைப்பதன் மூலம் தென்னிந்தியாவிற்கும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்குமான வர்த்தக நடவடிக்கைகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையிலும் அந்நிய செலாவணியை ஈட்டுவதிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் அபிவிருத்தியில் பின் தங்கியுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த துறைமுகம் முக்கியத்துவம் பெறுகின்றது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளதால் மீளச்செலுத்தும் தேவையற்ற இந்த நிதியுதவி மூலம் மேற்படி துறைமுகத்தை புனரமைத்து மீள ஆரம்பிக்க முடியும் என்ற நிலையிலும் இத்துறைமுக அபிவிருத்தி காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணத்தை அமைச்சர் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
