ஏர்பஸ் இரகசியங்களின் சாபம்! ராஜீவக்குப் பின் கபிலவின் அதிர்ச்சி மரணம்
இலங்கையின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து ஊழல் வழக்குகளில் ஒன்று தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன வெள்ளிக்கிழமை (08) கொல்லுட்டியில் உள்ள ஒரு இல்லத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த மரணம் ஏர்பஸ் வழக்கின் இரகசியங்களை அம்பலப்படுத்திய ராஜீவவின் மரணத்தின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
கபிலவின் மரணம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளர் ஏ.எஸ்.பி எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஏர்.பஸ் இலஞ்ச வழக்கில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) அவரது பிணையை இரத்து செய்ய மேற்கொண்ட முயற்சிகள் உட்பட, புதிய சட்டச் சிக்கல்கள் எழுந்த சில நாட்களுக்குப் பிறகு அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.
ஏர்பஸ் சர்ச்சை என்பது என்ன?
பொறியாளரிலிருந்து விமான நிறுவனத் தலைவர் வரை கபில சந்திரசேன இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் பெருநிறுவனத் துறைகளில் நன்கு அறியப்பட்ட ஒருவராகத் திகழ்ந்தார்.

தொழில்ரீதியாக ஒரு பொறியாளரான இவர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாவதற்கு முன்பு, அதில் உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
மேலும், ராஜபக்ச நிர்வாகத்தின் போது தொடங்கப்பட்டு, தற்போது செயல்படாத மலிவு விலை விமான நிறுவனமான மிஹின் லங்காவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
ஏர்பஸ் ஊழலானது, முந்தைய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேற்கொண்ட விமானக் கொள்முதல்களுடன் தொடர்புடையது.
விமான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இலங்கை உட்பட பல நாடுகளில் பெருமளவு இலஞ்சம் கொடுத்ததாக விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், 2020-ல் பிரித்தானிய நீதிமன்றம் ஒன்றில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் உலகளவில் சர்ச்சைக்குரியதாக மாறியது.
சர்வதேச விசாரணைகளின்படி, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மேற்கொண்ட விமானக் கொள்முதல் தொடர்பாக, இலங்கையைச் சேர்ந்த ஒரு இடைத்தரகு நிறுவனம் மில்லியன் கணக்கான டொலர்களை இரகசியமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக சந்திரசேன 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் கோரிப் பெற்றதாக இலங்கை புலனாய்வாளர்கள் பின்னர் குற்றம் சாட்டினர்.
பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஒரே இயக்குனராகவும் பங்குதாரராகவும் பட்டியலிடப்பட்டிருந்த பிஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரில் பராமரிக்கப்பட்டு வந்த ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக் கணக்கிலிருந்து, 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் பெறப்பட்டதாக, குற்றப் புலனாய்வுத் துறையால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட புலனாய்வு ஆவணங்கள் மேலும் வெளிப்படுத்தியிருந்தன.
விசாரணையாளர்களின் கூற்றுப்படி, சுமார் 363 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்ட இந்த நிதி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய விமானக் கொள்முதல் ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
சந்திரசேன 2020-ல் முதலில் கைது
சந்திரசேன 2020-ல் முதலில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவராவார்.

இந்த வழக்கு கடந்த பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதியும்(02.02.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 2 ஆம் திகதி பிறப்பித்த சிறிலங்கன் எயர்லைன்ஸிற்காக 10 ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் இடம்பெற்ற பெரிய அளவிலான ஊழல் மோசடி தொடர்பான வழக்கில், ராஜபக்ச குடும்பத்தின் மூத்தவரான சமல் ராஜபக்சவின் இளைய மகன் ஷமீந்திர ராஜபக்சவை மூன்றாவது சந்தேகநபராக கைது செய்ய உத்தரவிடப்பட்டது.
மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் ஒப்பந்தங்களில் ஒன்றாக கருதப்படும் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளை தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத் துறை (CID), கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றை தாக்கல் செய்தது.
இந்த மனுவின் மூலம், முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான சமல் ராஜபக்சவின் இரண்டாவது மகன் ஷமீந்திர ராஜபக்சவை வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடுவதற்கும், தற்போது அமெரிக்காவில் வசிப்பதாக கூறப்படும் அவரை கைது செய்ய பிடியானை பெறுவதற்குமான அனுமதியையும் CID கோரியது.
குறித்த ஊழல் இடம்பெற்ற காலத்தில் ஷமீந்திர ராஜபக்ச சிறிலங்கன் எயர்லைன்ஸின் இயக்குநர் குழு உறுப்பினராக இருந்தார். CIDயின் கோரிக்கையின்பேரில், நீதவான் இசுரு நெத்திகுமார ஷமீந்திர ராஜபக்சவை கைது செய்ய பிடியானை பிறப்பித்து, தேவையானால் இன்டர்போலின் உதவியுடன் கைது செய்யுமாறு உத்தரவும் இடப்பட்டது.
மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஜனாதிபதி காலமான 2010 முதல் 2015 வரை, பிரியங்கர ஜயரத்ன சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக (பெயரளவில்) பதவி வகித்தார்.
சிறிலங்கன் எயர்லைன்ஸ் அவரது அமைச்சின் கீழ் இருந்தபோதும், அது முழுமையாக ராஜபக்ச குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது என ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
விமான நிறுவனத்தின் இயக்குநர் குழு
அந்த காலகட்டத்தில் விமான நிறுவனத்தின் இயக்குநர் குழுவில்:

ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க (தலைவர்),
கபில சந்திரசேன (CEO),
ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமன்னே,
ஷமீந்திர ராஜபக்ச,
மணிலால் பெர்னாண்டோ,
சனத் உக்குவத்தே,
சுசந்த ரத்னாயக்க,
லக்ஸ்மி சங்கக்கார ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
வெலியமுன ஊழல் விசாரணை
அமைச்சரவையின் முன் அனுமதி இன்றி (பின்னர் அனுமதி பெறப்பட்ட நிலையில்), பிரான்ஸ் நிறுவனமான ஏர்பஸ்ஸிடமிருந்து ரூ. 290 பில்லியன் மதிப்பில் 12 ஏர்பஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

2013 மார்ச் 01 அன்று, நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சிறிலங்கன் எயர்லைன்ஸின் சிறப்பு இயக்குநர் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு இயக்குநர் ஷமீந்திர ராஜபக்ச முழுமையாக நிதியளித்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், சிறிலங்கன் எயர்லைன்ஸிற்காக 13 ஏர்பஸ் விமானங்களை குத்தகை அடிப்படையில் வாங்க தீர்மானிக்கப்பட்டது.
மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த பிரியங்கர ஜயரத்ன, நல்லாட்சி அரசாங்கம் நியமித்த, மூத்த ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன தலைமையிலான ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சாட்சி அளித்தார்.
அவர், “நான் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்தபோதும், சிறிலங்கன் எயர்லைன்ஸின் எந்த இயக்குநர் குழு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை” என தெரிவித்தார். இது விமான நிறுவனத்தின் மீது ராஜபக்ச குடும்பம் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியதை வெளிப்படுத்துகிறது.
இந்த கூட்டம் குறித்து முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் வெலியமுன ஆணைக்குழு கேள்வி எழுப்பியபோது, இதற்கு “என் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இப்படியொரு கூட்டம் நடந்தது எனக்கு தெரியாது” என அவர் பதிலளித்தார்.
16.4 மில்லியன் டொலர் கமிஷன்
இந்த பதிலை விமர்சித்த ராஜீவ் ஜயவீர, மத்திய வங்கி பத்திர மோசடி விசாரணையின் போது அர்ஜுன் அலோசியஸ் தனக்கு வீடு வழங்கியதைத் தெரியாது என ரவி கருணாநாயக்க கூறிய பதிலுடன் இதனை ஒப்பிட்டு கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கன் எயர்லைன்ஸ் CEO கபில சந்திரசேன, ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து விமானங்களை வாங்க ரூ. 16,924.36 மில்லியன் செலுத்தினார். பின்னர், ஏர்பஸ் நிறுவனம் இலங்கையில் உள்ள இடைநிலையாளர் ஒருவருக்கு 16.4 மில்லியன் டொலர் கமிஷன் வழங்க ஒப்புக்கொண்டது.
அந்த தொகையில் 2 மில்லியன் டொலர், கபில சந்திரசேனின் மனைவி பிரியங்கா விஜேநாயக்கின் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் பல அரச ஒப்பந்தங்களுக்கு நாமல் ராஜபக்ச அனுமதி வழங்கியதாக அனைவரும் அறிந்த இரகசியமாக இருந்து.
அரசு நிறுவனங்களில் வேலை பெறுவதற்குக்கூட பல அமைச்சர்கள் நாமல் ராஜபக்சவை அணுக வேண்டிய நிலை இருந்துள்ளது. ஏர்பஸ் நிறுவனம் பல நாடுகளில் விமான நிறுவன அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியமை வெளிப்பட்டதையடுத்து, பிரித்தானிய கிரௌன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2012ஆம் ஆண்டு புரூனையில் பதிவு செய்யப்பட்ட Biz Solutions Inc. என்ற போலி நிறுவனத்திற்கு ஏர்பஸ் 2 மில்லியன் டொலர் செலுத்தியதும், அந்த பணம் பின்னர் அந்த நிறுவனத்தின் சிங்கப்பூர் கணக்கிற்கு மாற்றப்பட்டதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
2020ஆம் ஆண்டு வெளியான பிரித்தானிய நீதிமன்ற ஆவணங்களில், சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிர்வாகி ஒருவரின் மனைவி ஏர்பஸ் விமானங்கள் வாங்குவதற்கான முகவராக செயல்பட்டு, 16.4 மில்லியன் டொலர் லஞ்சம் பெற ஒப்புக்கொண்டிருந்தார் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் CEO கபில சந்திரசேனும் அவரது மனைவி பிரியங்கா விஜேநாயக்கும் 2020 பெப்ரவரி 6 அன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் CID முதன்முறையாக இந்த வழக்கை விசாரித்திருந்த போதிலும், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமா அதிபர் துறையின் அறிவுறுத்தல்கள் தாமதமாகியுள்ளன என CID நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ராஜீவ மரணம்
CID ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், சட்டமா அதிபர் துறையின் வழக்கமான தாமதம் மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுக்கவோ அல்லது குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்கவோ காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ராஜீவ உலகின் பல விமான நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றியவர். ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவர் சிறிலங்கன் எயர்லைன்ஸின் நாட்டுப் பிரதிநிதியாக (Country Manager) பணியாற்றினார்.
ராஜபக்ச குடும்பத்தின் இந்த ஊழல் தொடர்புகளை வெளிப்படுத்தி அவர் ஒரு இணையதளத்தில் கட்டுரைகள் எழுதியிருந்தார்.
இன்று எவ்வாறு கொல்லுப்பிட்டியவில் சந்தேகத்திட்கிடமான முறையில் கபிலவின் உடல் கண்டெடுக்கப்பட்டதோ அதே போல இன்று அதாவது, 2020 ஜூன் 12 அன்று காலை 7.00 மணியளவில், கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் உள்ள ஒரு மரத்தின் கீழ் அவரது உடல் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது.
இது, சந்திரசேன தம்பதியர் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் கழித்து நடந்த சம்பவமாகும். அப்போது நாட்டில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தார்.
ராஜீவ ஜயவீர தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்தது.
அவர் இறப்பதற்கு முன் தனது சகோதரருக்கு எழுதியதாக கூறப்படும் ஒரு “தட்டச்சு செய்யப்பட்ட” கடிதம் இதற்கான காரணமாக முன்வைக்கப்பட்டது.
அந்த கடிதத்தில், அவர் 0.22 கலிபர் ‘மைக்ரோ’ துப்பாக்கியை வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அவரது தனிப்பட்ட பெட்டியின் PIN எண்ணையும் குறிப்பிட்ட ஒரு குறுந்தகவல் அவரது சகோதரருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
CCTV காட்சிகள்
எனினும் இந்த மரணம் தொடர்பாக காவல்துறை உரிய ஆர்வம் காட்டவில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது.
பின்னர், சுதந்திர சதுக்கம் மற்றும் அவரது இல்லத்திற்கு அருகிலுள்ள முக்கிய CCTV காட்சிகள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
ராஜீவவின் மரணம் கொலையல்ல, உயிரை மாய்ப்பு என கூறி சினமன் கார்டன் காவல்துறை நீதிமன்றத்தில் குறுந்தகவல்கள் மற்றும் தட்டச்சு செய்யப்பட்ட கடிதத்தை மட்டுமே ஆதாரமாக வழங்கினர்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஏர்பஸ் ஊழல் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. 2025 மார்ச் மாதத்தில், CID நாமல் ராஜபக்சவிடமிருந்து அறிக்கை பெற நடவடிக்கை எடுத்தது.
ஏர்பஸ் ஒப்பந்தத்தில் கிடைத்த பணம் வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதா என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு தொழிலதிபர், ஏர்பஸ் ஒப்பந்தத்திலிருந்து நாமல் ராஜபக்சவுக்கு வந்த பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்ற உதவியதாக CIDக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அறிவிக்கப்படாத சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் எல்லாம் தற்போது ராஜபக்ச குடும்பத்தையே குற்றம் சாட்டுவது ஒரு பழக்கமாகிவிட்டதாகவும் கூறப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |