முதலமைச்சரை நேரடியாக சாடிய விஜய் - கைது செய்யப்பட்ட யூடியூபர் வைத்தியசாலையில்
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வதந்திகளைப் பரப்பியதாக கூறி யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் நேற்று (30.09.2025) அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் முன்பு உடல் பரிசோதனை செய்ய சென்ற போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள்
கடந்த 27ஆம் திகதி த.வெ.க வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்துக்கு வந்தவர்களில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் த.வெ.க தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சி...எம்.சார்...பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், கட்சி தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் நான் இருப்பேன்” எனவும் அவரது காணொளியில் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரூர் சம்பவம் குறித்து தனது யூடியூப் சேனலில் அவதூறு பரப்பும் வகையில் பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக. பொதுச் செயலாளர் உட்பட 3 பேர் மீது கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த விஜய், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.
குற்றமற்ற கொலைக்கான தண்டனை
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் காவல்துறையினர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் மதியழகன் மீது கொலைக்கு சமம் ஆகாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை, குற்றமற்ற கொலை முயற்சி, மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேற்று த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகிய இரண்டு பேரையும் வழக்கில் சேர்த்து விசாரித்து வருகின்றனர்.
சட்டத்தரணிகள் மனு தாக்கல்
கரூரில் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கட்சியின் அங்கீகாரத்தை இரத்து செய்வதோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்துக்கு மதுரை மானகிரியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் ஆளவந்தான்பட்டியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவரும் கரூர் துயர சம்பவத்துக்கு காரணமாக நடிகர் விஜய் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து எந்தவித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். .
மேலும் இணையவழியினூடாகவும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு
இதேவேளை கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று செந்தில் கண்ணன் தாக்கல் செய்த அவசர வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கினார்.
இந்நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த மனு மீது இன்று விசாரணைக்கு ஏற்கப்படவில்லை.
மேலும், தவெக தாக்கல் செய்த வழக்கில் இடையீடு மனுவாக தாக்கல் செய்தால் தான் விசாரிக்க முடியும் எனவும் உயர்நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |