கரூர் பேரவலத்தின் பின்னணி : பதறும் செந்தில் பாலாஜி - போட்டுடைக்கும் அண்ணாமலை
புதிய இணைப்பு
பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில் செந்தில் பாலாஜி ஊடகச் சந்திப்பு நடத்தி, எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக (BJP) முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் நடைபெற, பரிந்துரைத்துள்ளது.
சிபிஐ விசாரணை கோரிய வழக்கு
இந்த நிலையில் நேற்று ஊடகங்களைச் சந்தித்த கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சாராய அமைச்சருமான செந்தில் பாலாஜி, புதிய கதைகளைக் கூறியுள்ளார்.
தவெக சார்பில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கு, வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவிருக்கிறது. கூட்டத்தில், விஜய் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின்போது தவெக வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் கோர்ட்டு முடிவு செய்ய வேண்டியது.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை அறியும் குழுவிடம் பெண்மணி ஒருவர், கூட்டத்தில் கத்திக்குத்து நடந்ததாகக் கூறியிருக்கிறார். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில், இவர் இப்போது ஊடகச் சந்திப்பு நடத்தி, அவை எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன?
செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம்
கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? கருத்துத் திணிப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன
யார் எங்கே சென்றார்கள், செல்லவில்லை என்று கேட்கும் தகுதி முதலில் திமுகவிற்கு இருக்கிறதா? கள்ளக்குறிச்சியில், திமுக கள்ளச்சாராய வியாபாரிகளால் விற்கப்பட்ட கள்ளச்சாராயம், 66 உயிர்களைப் பலிகொண்டபோது அங்கு போகாத முதல் அமைச்சர், தென்மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது, அங்கு சென்று மக்களைச் சந்திக்காமல், இந்தியா கூட்டணி உடன்பாடுகளுக்கு டெல்லி சென்ற முதல்-அமைச்சர், தற்போது மட்டும் ஓடோடி வந்ததன் பின்னணியை மக்கள் அறிவார்கள்.
கோர்ட்டும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், முன்னாள் சாராய அமைச்சர் இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் திகதி த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் சிலர் தமிழக காவல்தறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் கருத்து
இந்நிலையில், த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது சமூக வலைத்தளப் பதிவில் "வீதியில் நடந்து சென்றாலே தடியடி, சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது, இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாகக் காவல்துறை மாறிப் போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.
இளைஞர்களும், Gen - Z தலைமுறையும் ஒன்றாக கூடி அதிகாரத்துக்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதேபோல் இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும் என அந்தப் பதிவில் கூறியிருந்தார்.
இதற்குப் பலரும் தமது கண்டனங்களைத் தெரிவித்து வந்த நிலையில் அவர் அந்த அப்பதிவை நீக்கினார்.
இந்த நிலையில் , ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள்
சம்பவம் தொடர்பில் த.வெ.க தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சி...எம்.சார்...பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.
ஆனால், கட்சி தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் நான் இருப்பேன்” எனவும் அவரது காணொளியில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
