சதாம் ஹுசைனைக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் : அலி காமெனிக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
ஈரானின் உச்சத் தலைவர் அலி காமெனிக்கும் "சதாம் ஹுசைனைப் போன்ற ஒரு நிலையே ஏற்படும்" என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ்(israel katz) தெரிவித்துள்ளார்.
இன்று(17) காலை இஸ்ரேலிய உயர் இராணுவ அதிகாரிகளுடன் கள மதிப்பீடு தொடர்பாக கலந்துரையாடியபோது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து போர்க்குற்றங்களை செய்யும் ஈரான் சர்வாதிகாரி
"ஈரானிய சர்வாதிகாரியை தொடர்ந்து போர்க்குற்றங்களைச் செய்வதையும் இஸ்ரேலிய பொதுமக்கள் மீது ஏவுகணைகளை ஏவுவதையும் நான் எச்சரிக்கிறேன். இதே பாதையைத் தேர்ந்தெடுத்த சர்வாதிகாரியின் தலைவிதியை அவர் நினைவில் கொள்வது நல்லது" என்று கட்ஸ் குறிப்பிட்டார்.
2003 இல் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பின் போது பாலமொன்றின் கீழ் மறைந்திருந்த சதாம் ஹுசைன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் அரசு ஒளிபரப்பு தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை குறிப்பிட்ட அவர் ஈரானிய சிவில் ஆட்சியின் பிற அலுவலகங்களும் குறிவைக்கப்படலாம் என்று தெரிவித்தார்.
தெஹ்ரானில் வசிப்பவர்கள் வெளியேறவேண்டும்
"பிரசாரம் மற்றும் தூண்டுதல் ஒளிபரப்பு அதிகாரத்திற்கு எதிராக நேற்று செய்தது போலவே, இன்றும் தெஹ்ரானில் உள்ள ஆட்சி மற்றும் இராணுவ இலக்குகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்" என்று அவர் குறிப்பிட்டார்.
"தெஹ்ரானில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக, ஐ.டி.எஃப் செய்தித் தொடர்பாளரின் பாரசீக மொழியில் உள்ள அறிவுறுத்தல்களின்படி அந்தப் பகுதிகளை காலி செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று கட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
