கெஹலியவின் வழக்கு! தீயில் கருகிய முக்கிய சாட்சியங்கள் - உடன் விசாரணைக்கு அழைப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தரமற்ற மருந்து விநியோகம் குறித்த சர்ச்சைக்குரிய வழக்குடன் தொடர்புடைய மருந்து விநியோக நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியசாலை ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தினால் வழக்கிற்குத் தேவையான முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இது குறித்து கருத்து தெரிவிக்கையில், குறித்த காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்து மாதிரிகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் இந்தக் களஞ்சியசாலையிலேயே வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
உடனடி விசாரணை
மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு இந்த ஆவணங்கள் மிகவும் முக்கியமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, இந்தத் தீ விபத்து தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது ஆதாரங்களை அழிப்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்டதா என்பதைக் கண்டறிய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
திட்டமிட்ட நடவடிக்கை
மருத்துவ வழங்கல் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த விசாரணைகளை இந்த ஆவணங்களின் இழப்பு கடுமையாகப் பாதிக்கக்கூடும் எனவும், நீதித்துறை நடவடிக்கைகளுக்குத் தடையாக இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, தாமதமின்றி இது குறித்த முழுமையான விசாரணையை முன்னெடுக்குமாறு சட்ட நடைமுறையாக்க அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 11 மணி நேரம் முன்