அறிவிக்கப்பட்டார் ஈரானின் புதிய உச்சத் தலைவர்!
புதிய இணைப்பு
ஈரானின் புதிய உச்சத் தலைவராக முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தீர்மானம், 88 உறுப்பினர்களைக் கொண்ட மூத்த மதத் தலைவர்கள் அடங்கிய நிபுணர் சபையினால் எடுக்கப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து, இந்த அமைப்பு புதிய உச்ச தலைவரை தேர்வு செய்தது இதுவே இரண்டாவது முறை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் ஈரானில் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஈரானின் உச்ச தலைவர் பதவியில் கமேனியின் பெயர் தொடரும் என தலைவரைத் தேர்வு செய்யும் நிபுணர் சபையின் உறுப்பினர் ஹொசைனாலி எஸ்கேவரி தெரிவித்துள்ளார்.
தலைமை நிர்ணயம் தொடர்பான வாக்கெடுப்பு முடிந்துவிட்டதாகவும் அதிகாரிகள் விரைவில் அதனை அறிவிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
இந்தக் கருத்து, கொல்லப்பட்ட முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி அடுத்த உச்சத் தலைவராக அறிவிக்கப்படலாம் என்ற சாத்தியத்தை எடுத்துக் காட்டுகிறது.
விரைவில் அறிவிப்பு
56 வயதான மொஜ்தபா கமேனி நடுத்தர நிலை மதபோதகராக இருக்கிறார். அவருக்கு அரசில் அதிகாரப்பூர்வ பதவி இல்லை. ஆனால் ஈரானின் சக்திவாய்ந்த இராணுவ அமைப்பான ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கமேனியின் மகன் தனது தந்தைக்கு பதிலாக உச்சத் தலைவராக நியமிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, ஆனால் ஈரானில் புதிய உச்சத் தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |