அடிகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!
கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவபுரம் பகுதியில் குறித்த சம்பவம் கடந்த 14ம் திகதி இடம்பெற்றள்ளது.
காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான மாயழகு மனோகரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 14ம் திகதி சித்திரைப் புத்தாண்டு அன்று இரவு 9 மணியளவில் சிவபுரம் கிராமத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றள்ளது. இரு நபர்களிற்கிடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்த நிலையில் வீதியால் பயணித்த நபர் சம்பவ இடத்தில் முரண்பட்டுக்கொண்டிருந்த அவரது உறவினரிடம் என்ன சத்தம் என வினவியுள்ளார்.
இதன்போது அந்த நபர் மீது மற்றய நபர் தாக்குதல் மேற்கொண்டதாகவும், தாக்குதல் மேற்கொண்டவர் மது போதையில் இருந்ததாகவும் சம்பவத்தை அவதானித்தவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனை அடுத்து தாக்குதலிற்குள்ளான நபரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் சிகிச்சை பயனளிக்காது என தெரிவித்து மீண்டும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சடலம் இன்று மாலை குடும்பத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முனனெடுத்து வருகின்றனர்.