திருடப்பட்ட கொழும்பு கொம்பனித்தெரு ஆலய நகைகள் நன்கொடைகள் மூலம் மீட்பு
கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகத்தாக்களின் தாராளமான தனிப்பட்ட நிதியுதவி மூலம் புனிதமான தங்க நகைகள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆலயத்தின் புனிதத்தையும் பக்தர்களின் நம்பிக்கையையும் காக்கும் நோக்கில், தர்மகத்தாக்களான ஏ.எம்.ரி.தனநாயகம் 12.4 மில்லியன் ரூபாவையும், திருக்குமாரன் நடேசன் 12.4 மில்லியன் ரூபாவையும் தமது சொந்த நிதியிலிருந்து நன்கொடையாக வழங்கி அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை முழுமையாக மீட்டுள்ளனர்.
ஆலயத்தில் கடமையாற்றிய சதீஸ்குமாரகுருக்கள் என்பவரே நகைப்பெட்டகத்தின் சாவியைப் பயன்படுத்தி இத்திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இவர் திருடிய நகைகளை கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள சி.டி.பி வங்கியில் 5,280,000 ரூபாவுக்கும், விமல் அடகு நிறுவனத்தில் 5,570,000 ரூபாவுக்கும், எஸ்.எம்.பி நிறுவனத்தில் 15,925,950 ரூபாவுக்கும் அடகு வைத்து, மொத்தமாகப் பெற்ற சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபாவைச் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய உற்சவத்தின் போது நகைப்பெட்டகத்தைத் திறந்தபோதே இத்திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. அதனையடுத்து ஆலய நிர்வாகத்தினர் கொம்பனித்தெரு காவல்நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான சதீஸ்குமாரகுருக்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்த நீதிவான், அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |