குமரன் பத்மநாதனின் கைதை அறியாத சுரேஷ் சலே! மகிந்தவும் - கோட்டாபயவும் பேசிய டீல்
விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கே.பி என்ற குமரன் பத்மநாதனை சுரேஷ் சலே தான் கைது செய்தார் என இப்போது வாயச்சவடால் பேசுபவர்களுக்கு சரத் பொன்சேகா சாட்டையடி ஒன்றை கொடுத்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
“நான் முப்படைகளின் பிரதானியாக இருக்கும் போது ஒரு நாள் இரவு கோட்டாபய தொலைபேசியில் சரத், கே.பியை கொண்டு வந்திருக்கிறார்கள். உங்களுக்கு தெரியுமா? என கேட்டார்.
இலங்கைக்கு கொண்டு வரும்வரை அவர் யார் என தெரியாது.
புலனாய்வு குழு
மலேசியாவில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராஜதந்திர அளவில் வந்த அழைப்பையடுத்து, புலனாய்வு குழு ஒன்று மலேசியாவுக்கு சென்று கைது செய்யப்பட்டிருந்தவரை விமானத்தில் அழைத்து வந்துபோது அவரை பாரப்படுத்த மலேசியாவில் இருந்து இருவரும் வந்திருந்தனர்.

அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை ஒப்படைத்து விட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இவர் கே.பி உங்களுக்கு பாரப்படுத்துகிறோம் இதன் பின்னர் இவரை நீங்கள் எதையாவது செய்யுங்கள் என அவர்கள் போய்விட்டனர்.
அப்போது தான் சி.ஐ.டியினர் கோட்டாபயவுக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளனர். அதன் பின்னரே கோட்டாபய எனக்கு சொன்னார்.
கே.பியுடன் டீல்
கே.பி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக கோட்டாபயவின் வீட்டுக்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சி.ஐ.டியில் கொஞ்சம் காலம் இருந்தார்.

ஆனால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டவில்லை. பின்னர் அவர் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
கே.பியிடம் இருந்த கப்பல்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பணம் போன்றவற்றுக்கு என்ன நடந்தது என்று கோட்டாபய தான் அறிவார்.
அதன் பின்னர் கே.பியுடன் டீல் பேசியது மகிந்தவும் - கோட்டாபயவும் தான். அவர்கள் என்ன செய்தார்கள் என எங்களுக்கு தெரியாது. கே.பிக்கு எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |