குவைத் விமானச் சேவைகள் மீண்டும் தொடக்கம்...! வெளியான அறிவிப்பு
குவைத்தின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான குவைத் ஏர்வேஸ் (Kuwait Airways) மற்றும் ஜசீரா ஏர்வேஸ் (Jazeera Airways) ஆகியவை தமது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன.
இதனடிப்படையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) முதல் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என குவைத் அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சர்வதேச அளவில் ஒரு டசனுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு இந்த விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.
விமான சேவைகள்
பிராந்தியப் பதற்றங்கள் காரணமாக கடந்த பிப்ரவரி 28 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த குவைத் சர்வதேச விமான நிலையம், தற்போது வியாழக்கிழமை மாலை முதல் மீண்டும் திறக்கப்படுவதாகக் குவைத் சிவில் ஏவியேஷன் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக லண்டன், இஸ்தான்புல், கெய்ரோ, ரியாத், மணிலா மற்றும் இந்தியாவின் மும்பை, சென்னை, கொச்சி, டெல்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட 17 முக்கிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

இதில் குவைத் ஏர்வேஸ் விமானங்கள் நான்காவது முனையத்திலிருந்தும் (T4), ஜசீரா ஏர்வேஸ் விமானங்கள் ஐந்தாவது முனையத்திலிருந்தும் (T5) செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அதன் சார்பு ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த விமான நிலைய வசதிகள் அனைத்தும் முழுமையாகச் சரிசெய்யப்பட்டு தற்போது பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |