ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி! அரசாங்கத்தால் புனையப்பட்டவரே “நௌபர் மௌலவி” - சபையில் சாடிய எதிர்க்கட்சி
ஈஸ்டர் தாக்குதலுக்கு நௌபர் மௌலவி என்பவரே பிரதான சூத்திரதாரி என்பது அரசாங்கத்தினால் புனையப்பட்ட கதையாகக் கூட இருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தமினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதலுக்கும் புலனாய்புப் பிரிவினருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியின் சர்வதேச சக்திகள் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இது தொடர்பாக எந்தவொரு தகவலும் வெளிக்காட்டப்படவில்லை.
எனினும், இரண்டு வருடங்களுக்கு பின்னர் நேற்று பிரதான சூத்திரதாரியொருவரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், நௌபர் மௌலவியை ஆணைக்குழு முன்னினையில் சாட்சிக்காக கொண்டுவரவில்லை.
கொழும்பு பேராயர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பும் பிரதான சூத்திரதாரி குறித்து கேள்வி எழுப்பும் இச்சந்தர்ப்பத்திலேயே குறித்த நபரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கருத்து தொடர்பாக எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை சஹ்ரானுக்கு 2009ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தால் சம்பளம் வழங்கப்பட்டுள்ள போதும் யார் இதனை வழங்கியது என்பது தெரியாது என்றும் அதற்கான சாட்சியங்கள் ஆணைக்குழு முன்பாக வரவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.