தையிட்டி விகாரை காணியை விடுவிக்க மாட்டோம் : யாழ் மாவட்ட செயலாளருக்கு பறந்த கடிதம்
யாழ்ப்பாணம் (Jaffna) - தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது என்றும் அதனை யாருக்கும் கையளிக்க முடியாது எனவும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அந்த சம்மேளனம் யாழ்ப்பாண மாவட்ட செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணியை பொது மக்களுக்குக் கையளிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
14 ஏக்கர் காணி
குறித்த கூட்டத்திற்கு, விகாரைக்கு பொறுப்பான விகாராதிபதியையோ அல்லது விகாரை நிர்வாகத்தினரையோ அழைத்திருக்கவில்லை. இதன் காரணமாக அந்த இணக்கப்பாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
விகாரை அமையப்பெற்றுள்ள 7 ஏக்கர் காணி, அதனைச் சூழவுள்ள காணி என 14 ஏக்கர் காணியையும் விகாரைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக விகாரைக்கு சொந்தமான காணிகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது.
விகாரைக்கு உரிய காணியில், சைத்யம், புத்த மெதுரா, அன்னதான மடம், மடாலயம், ஓய்வு மண்டபம், தியான மண்டபங்கள், பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும்.
எனவே அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)