புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் 5வது நாளாகவும் ஆர்ப்பாட்டம்
திருகோணமலை (Trincomalee) - குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் புல்மோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் 83 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த 83 ஊழியர்களுக்கும் கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதால் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.
இதனால் தங்களுக்கான நீதியை கோரி இன்று (18) ஐந்தாவது நாளாக அவர்களின் அமைதிவழிப் போராட்டம் தொடர்கிறது.
சம்பளம் வழங்க நடவடிக்கை
குறித்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கில், பலமுறை நிறுவன மேலதிகாரிகளிடமும், தொழிலாளர் திணைக்களத்திடமும், சம்பந்தப்பட்ட அமைச்சிலும் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவிதமான பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால் பலர் குடும்பச் செலவுகளையும், குழந்தைகளின் கல்வியையும் மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, ஜனாதிபதி, அமைச்சர், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டின் மூலம் உரிய அமைச்சின் ஊடாக இந்தப் பிரச்சினை விரைவாகத் தீர்க்கப்பட்டு, தங்களுக்குரிய நிலுவை சம்பளங்கள் வழங்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர்.
இந்தநிலையில் தொடர்ந்தும் தமக்கான தீர்வுகள் கிடைக்காதவிடத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகிவருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
