பல மில்லியன் கணக்கான கனியமணலை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் இலங்கை
இலங்கை வழமையாக இறக்குமதிகளையே மேற்கொள்கின்றது. ஆனால் இப்போது எமது நாட்டிலேயே அகழப்பட்ட கனியமணலை ஏற்றுமதி செய்கின்றோம். இது ஒரு சிறப்புவாய்ந்த ஏற்றுமதியாகும். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இக்காலத்தில் இடம்பெறும் இந்த ஏற்றுமதி மூலம் பல மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி இலங்கைக்கு கிடைக்கும்.
இவ்வாறு, புத்தளம் இல்மனைட் நிறுவனத்தின் பொது முகாமையாளரும் கனிம அகழ்வுத் துறை நிபுணருமான றையான் ரொக்வூட் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பெறுமதியுடைய பெருமளவிலான கனிய மணலை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பெறப்பட்ட 30 ஆயிரம் மெற்றிக்தொன் கனியமணலே சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கனிப்பொருள் மணல் நிறுவனம் மேற்கொண்ட சர்வதேச அளவிலான கேள்வி மனுக்கோரல் ஊடாக சீன நிறுவனம் ஏற்கனவே தெரிவு செய்யட்டிருந்த நிலையில், திருகோணமலை துறைமுகத்தின் அஷ்ரப் இறங்கு துறையில் இருந்து அதனை கப்பலேற்றும் நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக இடம்பெற்றன.
சீன நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக புத்தளம் இல்மனைற் நிறுவனம் செயற்பட்டது.
கனிப்பொருள் பதப்படுத்தல் வசதி
இது தொடர்பில், இலங்கை கனிப்பொருள் மணல் நிறுவனத்தின் பதில் பிரதி பொது முகாமையாளரான எஸ். ராஜகுரு தெரிவிக்கையில்,
“65 வருடங்களுக்குப் பிறகு இவ்வாறான பாரிய ஏற்றுமதி ஒன்றை நாம் மேற்கொள்கின்றோம். சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மேற்கொள்ளபட்ட விலைமனுக் கோரலில் அதிக விலையை கூறியிருந்த சீன நிறுவனத்திற்கே இது ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
அரச நிறுவனம் என்ற வகையில் இது பெரிய வெற்றியாகும்” என்றார்.
இதேவேளை இலங்கையின் முதலாவதும் உலகத் தரம் வாய்ந்ததுமான கனிப்பொருள் பதப்படுத்தல் வசதியை நிறுவுவதற்கு புத்தளம் இல்மனைற் லிமிட்டெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கனிம அகழ்வு துறையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காக தனது பங்காளர் நிறுவனங்களுடன் இணைந்து ஏற்கனவே 20 மில்லியன் அமெரிக்க டொலரை மூதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.