இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர்
இருதயம் வலிக்கின்றது, நிச்சயமாய் தெரியும் நான் இறக்கத்தான் போகின்றேன். அமைதியானதோர் வெறுமை இப்போது கண்முன்னே நிழலாடுகின்றது. முழுவதுமாய் இரத்தத்தில் நனைந்து போயுள்ள எனது உடலை யாரோ பற்றிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதும் நன்றாகவே தெரிகின்றது. 'எனக்கு நெஞ்சு வலிக்கின்றது, கொஞ்சம் தடவி விட முடியுமா?' எனது வார்த்தைகள் தடுமாறுகின்றன. வைத்தியசாலைக்குதான் கொண்டு செல்லப்படுகின்றேன் என்பது நன்றாகவே தெரிகின்றது.
இறந்து போவதற்காக நான் அச்சப்படவில்லை, இப்படியானதோர் நிலை வரும் என்று எப்போதோ நான் நன்றாக அறிந்துதான் இருந்தேன். ஆனால் என்றுடைய மரணம் மிகச்சாதாரணமாக முடியப்போவது இல்லை என்பது மட்டும் எனக்கு தெரியும். இப்படியாய் நான் சிந்தித்துக் கொண்டு இருக்கும் போதே கண்கள் இருட்ட ஆரம்பித்து விட்டன......
சற்று நேரத்திற்கு முன்னர் என்ன நடந்தது?
காலம் பரபரப்பான காலைப் பொழுது (2009.01.08.) அத்தனை பரபரப்பிற்கு மத்தியிலும் ஒரு சாம்பல் நிற வண்டியை முகங்களை மறைத்தபடி மோட்டார் வண்டியில் ஒரு குழு பின்தொடர்கின்றது. அந்த வண்டியில் பயணித்தவர் 50 வயது, திடகாத்திரமான நபர். பின்தொடர்ந்து வந்த அந்தக்குழு ஒரு சந்தியை தாண்டும் பொழுது திடீரென்று வண்டியை மறித்து துப்பாக்கியால் அவரை சுடத் தொடங்கியது. தோட்டாக்கள் பாய்ந்த பின்னரும் கூரிய ஆயுதத்தால் அவரை குத்தவும் செய்தது. நிச்சயமாய் அவர்கள் கூலிப்படைதான், தன் எஜமானின் கட்டளைக்கும் வாங்கிய கூலிக்கும் எந்தவித பங்கமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாய் செயல்பட்டது. தோட்டாக்களில் சிலவேளை உயிர் பிழைக்கும் சாத்தியம் உண்டு என்பதால் அவரை குத்தியும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தும் விட்டு தப்பிச் சென்றது அந்த மர்மக் குழு. பின்னர் அந்த இடத்தில் கூடிய சிலர் தாக்குதலுக்கு உள்ளான அந்த நபரை அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
இப்போது நான்....
அன்று நான் கொடூர மிருகங்களின், அதிகாரத்தின் இரத்தப்பசிக்கு இறையாகினேன். உண்மையில் மரணம் என்னை துரத்திக் கொண்டு இருந்ததையும் ஏதோவோர் சந்தர்ப்பத்தில் இந்நிலை ஏற்படும் என்பதை நன்றாகவே அறிந்துதான் வைத்திருந்தேன் காரணம் நான் எனது தொழிலுக்கும், மக்களுக்காகவும், உரிமைகளுக்காகவும், அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவன். வேடிக்கை என்னவென்றால் ஓர் அவலச்சாவு எனக்கு வந்து சேரும் என்பது எனக்கு மட்டுமல்ல என்னை சார்ந்தவர்கள், நண்பர்கள், குடும்பத்தார் என அனைவருக்கும் தெரிந்திருந்தது. அதனால் என்னை பல முறை எச்சரிக்கையும் செய்திருந்தார்கள். எனது மரணம் நிச்சயமாய் என் நாட்டை ஒரு இருண்ட யுகத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை இப்போதாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவன்தான் நான். எப்படியோ அராஜகங்களுக்கு எதிராக எனக்கு ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தது. ஊழல்களுக்கும், கொள்ளைகளுக்கும் எதிராகவும், சுயநலப்பிசாசுகளை ஓரங்கட்டவும் ஆயுதம் ஏந்தி போராட வேண்டியிருந்தது. ஆம் அதற்காக நான் கையில் எடுத்த மிகப்பெரிய ஆயுதம் பேனை. எழுத்தால், சுயசிந்தனையால் மட்டுமே ஓர் மாற்றத்தை கொண்டு வர முடியும் என நான் பெரிதாக நம்பினேன், அதனை அப்படியே செயற்படுத்தினேன். விளைவு அதனால் ஏராளமான எதிரிகளையும் சம்பாதித்துக் கொண்டேன்.
ஊடகத்துறை என்பது எனக்கு தீரா போதை. உண்மையில் அதற்கு அடிமையாகவே நானிருந்தேன். அது என்னை அடையாளப்படுத்திய ஒன்றாகவே பார்த்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக நான் ஏந்திய எழுத்தாயுதம் என்னை ஓர் மாற்றத்தை ஏற்படுத்து என்று உறங்கவிடாது துரத்தியது. ஆனால் பக்கசார்பு இன்றி நடுநிலையாக மக்களுக்காக அந்த போதையினை நான் மிகச் சரியாக பயன்படுத்தினேன். உனது இரத்தம் பச்சையா, நீலமா எனும் அளவிற்கு இலங்கையை இரண்டு பெரிய கட்சிகள் கைக்குள் வைத்திருந்த காலகட்டம் அது. ஆனால் யார் அதிகாரத்தில் இருந்தாலும் ஊழல்களை அம்பலப்படுத்த நான் தயங்கவில்லை.
அச்சுறுத்தல் காரணமாகவே ஆரம்பத்தில் சுரனிமல என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதியும் வந்தேன். எந்த நிலையிலும் அச்சுறுத்தலுக்கு நான் தலைவணங்கவில்லை. நினைவிருக்கின்றது 1995.02.07 அன்று முதலாவதாக தாக்கப்பட்டேன். இது முக்கியமான ஒன்றை அடிக்கோளிடுகின்றது. இந்த அடக்குமுறைக் கலாச்சாரமானது இப்போது உருவானது அல்ல என்பதற்கான சான்று அது. அப்போது அதிகாரத்தில் இருந்த சந்திரிக்கா பற்றிய ஊழல்களை எழுதியற்காகத்தான் நான் மாத்திரமல்லாமல் எனது மனைவி ரைனும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டாள். அதன் பின்னர் 1998 யூன் மாதம்17 ஆம் திகதியும் எனது குடும்பத்தை முற்றாக அழிக்கத் துணிந்தவர்கள் எனது வீட்டை துப்பாக்கிகளுக்கு இரையாக்கினர். ஆனால் தெய்வாதீனமாக அன்று நாம் உயிர் பிழைத்தோம். அடுத்து 2000 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதியன்று உச்சகட்டமாக நானும் எனது சகோதரனும் நடத்தி வந்த எமது சன்டே லீடர் பத்திரிகைக்கு சந்திரிக்கா அம்மையார் சீல் வைத்தார். அதிகார வர்க்கத்தின் உச்சகட்ட அடக்கு முறையாகவே நான் அதனைப் பார்த்தேன். பின்னர் 2005ஆம் ஆண்டும் எமது நிறுவனத்திற்கு தீ வைத்து எம்மை முடக்கப்பார்த்தனர்.
இவர்கள்தான் இப்படி என்று இல்லை எனக்கு அரசியல்வாதிகள் நண்பர்களாகவே இருந்தனர். இந்த நட்பு பாராட்டல்கள் எப்படியானது என்று உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அப்படியான நண்பர் மஹிந்த ராஜபக்ஷவும் அதிகாரத்திற்கு வந்தபின்னர் 2006.01.03 ஆம் திகதி எனக்கு தனிப்பட்ட தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தன்னையும் தனது குடும்பத்தையும் விமர்சனம் செய்யக் கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்தார். அதற்கு அடுத்தும் அதே வருடம் பெப்ரவரி 21ஆம் திகதியும் மஹிந்த மீண்டும் என்னை தொலைபேசியில் அச்சுறுத்தினார். 2007.11.21 ஆம் ஆண்டும் எமது ஊடகத்தளத்திற்கு தீ வைக்கவும் பட்டது.
இப்படியான பலவற்றை கடந்துதான் நான் வந்தேன். ஆனால் நான் எனது துறைக்கான திமிரோடு மாத்திரமே பயனித்தேன் என்பதைத் தாண்டி தனிப்பட்ட விரோதங்கள் எதனையும் யார்மீதும் நான் கொண்டிருக்கவில்லை. ஆட்சி மாற்றங்கள் இடம் பெற்ற போதும் எம்மீது அடக்குமுறைகளை மேற்கொண்ட எவரும் தண்டிக்கப்படவில்லை என்பதை சற்றே நினைவுபடுத்தியும் விடுகின்றேன்.
ஆம் முன்னராக என்மீதும் என் மனைவி மீதும் தாக்குதல் மேற்கொண்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தினார்கள். அம்புகளை மாத்திரமே அதில் அப்போதைய அதிபரின் பாதுகாப்பு பிரிவில் இருந்த ஒருவரும் இருந்தார். தண்டனை கிடைக்கும் என்று அறிந்த அவர் என்னிடம் மன்னித்துவிடும்படியும் தனக்கு குடும்பம் உள்ளதாகவும் ஆணைக்கே கட்டுப்பட்டதாகவும் மன்றாடிய போது அவரை மன்னித்து விடுமாறு நான் பொலிஸ் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினேன் காரணம் எய்தவரை விட்டு அம்புகளை தண்டிப்பதில் என்ன பயன்?
கடப்பின் பதிவுகளில் ஓர் சம்பவம்.....
கட்டுகளாக கொண்டு வந்து அடுக்கப்பட்ட விடைத்தாள்களுக்குள் தனது விடைத்தாளும் இருப்பதை கண்ட அந்தச் சிறுவன். இரவு வரும்வரையிலும் காத்திருந்து சந்தடி செய்யாமல் தனது விடைத்தாளை மாத்திரம் உருவி பிழைபிழையாய் எழுதப்பட்டிருந்த தனது விடைகளை சரியாக எழுதி மீண்டும் விடைத்தாள் கட்டுகளுக்குள்ளேயே அடக்கி விடுகின்றான்.
அவனுடைய அண்ணன் ஓர் ஆசிரியர் என்பதாலேயே இந்த வாய்ப்பு அவனுக்கு கிட்டியது. வகுப்பிலேயே முதல் மாணவனாக பெருமையுடன் நிற்கும் காட்சியை மனக்கண்முன் நிறுத்திக்கொண்டு உறங்கிப்போகின்றான். விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. அனைத்து மாணவர்களும் எங்கெங்கோ பிழைகள் விட்டிருக்க தன் தம்பி மாத்திரம் எப்படி மிகச்சரியான விடைகளை எழுதியிருக்கின்றான் என்பது கண்டு வியக்கின்றான் அண்ணன், கள்ளத்தனம் பிடிபடுகின்றது. எது எப்படியோ அந்த கணிதப் பரீட்சையில் அவனுக்கு புள்ளிகள் எதுவும் வழங்கப்படாமலேயே விடப்படுகின்றது.
அந்தச் சம்பவத்தினால் 'திருட்டுச் செயல்களால் எப்போதும் வெற்றி கிட்டாது' என்ற பாடத்தினை கற்றுக்கொள்கின்றான் அந்தச் சிறுவன். அவன் கிரிக்கெட் விளையாட்டில் நல்ல திறமையான ஒருவன் மாத்திரமல்லாது விவாதங்களில் வெள்ளையை கருப்பு என்றும் சாதிக்கும் வல்லமை கொண்ட திறமை வாய்ந்தவன். அந்தக் காலத்தில் யாரும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள் அந்தக் குறும்புக்காரன் வருங்காலத்தில் இலங்கை மாத்திரமல்லாது ஒட்டுமொத்த உலகமும் திரும்பிப்பார்க்கும் ஒரு மனிதனாக உருவெடுப்பான் என்பதனை.
இப்போது நான்....
இன்றைக்கு என் நாட்டின் நிலைமை அப்போதே எனக்கு தெரிந்திருந்தது. விடுதலைப் புலிகள் மீதான என்னுடைய பார்வை என்னை தேசத்துரோகியாக வர்ணித்தது. வர்ணித்தது என்பதை விடவும் வர்ணிக்கப்பட்டேன் என்பதே பொருத்தமானது. நான் ஒன்றும் அவர்களை ஆதரிக்கவில்லை. மாறாக பிரிவினைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டிய அதேவேளை, பயங்கரவாதத்தின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியமானது என்பதையே நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். மேலும் பயங்கரவாதத்தின் தொலைநோக்கி மூலம் அல்லாமல் வரலாற்றின் பின்னணியில் இலங்கையின் இனக்கலவரத்தை பார்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினேன். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதற்கும் அரச பயங்கரவாதம் என்பதற்கும் இடையிலான வேறுபாட்டை நான் நன்றாகவே புரிந்து வைத்திருந்தேன். அதற்காக துரோகிப்பட்டங்களும் எனக்கு வரத்தான் செய்தது.
தமிழ்க் குடிமக்களின் உரிமைகளை மீறி, குண்டுவீசி, இரக்கமின்றி அவர்களைச் சுட்டுக் கொன்று, இப்படிச் செய்வது தவறானது மட்டுமல்ல, அது எப்போதும் நீங்காத வடுக்களாக மாறிப்போகும் என்பதையும், போரின் காயங்கள் தமிழ் மக்களை என்றென்றும் காயப்படுத்தும், அதனையும் தாண்டி நீங்கள் போராடுவதற்கு இன்னும் கசப்பான மற்றும் வெறுக்கத்தக்க புலம்பெயர்ந்தோரையும் எதிர்காலத்தில் கொண்டிருப்பீர்கள். என்பதையும் கூட நான் அடிக்கடி நினைவு படுத்தி வந்தேன். மண்டை ஓட்டுக் குவியலின் மேல் அமர்ந்து ஆட்சி செய்வதில் எவ்வித நன்மையும் கிட்டப் போவதில்லை என்பதையும் நான் சொல்லியும் வந்தேன். இதில் நகைமுரண் என்னவென்றால் இப்படியான என் கருத்துகளுக்காய் எனக்கு வழங்கப்பட்ட பெயர் இன, தேச, பௌத்த துரோகி. இதனை நினைத்து நான் தனிமையில் ஏராளமாய் சிரித்ததுமுண்டு.
எப்படியோ அன்றைக்கு நான் கொல்லப்பட்ட பின்னர் எனது மரணச்சடங்கில் ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்களில் எதிரிகளும், விரோதிகளும், துரோகிகளுமே அதிகமாக இருந்திருப்பார்கள் போலும் காரணம் அதற்கடுத்து அவர்கள் நடந்து கொண்ட விதம் அப்படித்தான் நினைக்க வைக்கின்றது. இத்தனை வருடங்கள் கடந்து இற்றைக்கு இதனை நான் நினைவு படுத்திக் கொள்கின்றேன். காரணம் கொலையாளி இல்லாத கொலை என்னுடையது. இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர் என்னுடையது. யுத்தத்தை முடித்தோம், புலனாய்வில் சர்வதேசத்தையும் வென்றுவிடுவோம் என்று மார்தட்டிக் கொள்ளும் பெருமை எமது நாட்டுக்கு கிடையாது என்பது வேதனையான உண்மை.
ஊடகத்துறையில் மஞ்சள்பத்திரிகை கலாசாரம் என்று ஒன்று இருக்கின்றது. அப்படித்தான் இப்போதைய ஊடகத்துறையினை நான் பார்க்கின்றேன். 'இதோ பிடித்து விட்டோம், கொலையில் திடுக்கிடும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன, முக்கிய புள்ளிகளுக்கு கைதுகள் காத்திருக்கின்றன' என்றெல்லாம் கூறிவந்தார்கள். ஆனால் நடப்பில் எதுவும் சாத்தியப்படவில்லை. எனது மரணம் அரசியல் மாற்றங்களுக்கானதோர் கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை பார்த்து நான் சிரிப்பதா? அழுவதா?
2016 செப்டம்பர் 27 ஆம் திகதி எனது உடலை மீண்டும் தோண்டி எடுத்தார்கள். வேடிக்கை... நான் கொல்லப்பட்ட பின்னர் எனது மரணசான்றிதழை வழங்கவே மூன்று மாதங்கள் சென்றது. அதன் பின்னர் தோண்டி எடுத்து என்ன கிடைக்கப்போகின்றது. மரண அறிக்கையில் முரண்கள் காணப்பட்டதால் தோண்டினார்களாம். என்னை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதமானது வெளிநாடுகளில் பன்றிகளையும் ஆடுகளையும் அறுப்பதற்காக பயன்படுத்தும் ஆயுதம் என்பதை கூட கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் ஒட்டு மொத்த அதிகார, அரசியல்வர்க்கத்திற்கும் தெரிந்திருக்கும் நான் யாரால் கொல்லப்பட்டேன் என்பது ஆனால் அவர்கள் யாரையும் விசாரித்ததாய் நான் அறியவில்லை.
இன்னுமோர் வேடிக்கையான விடயமும் நினைவுக்கு வருகின்றது. எனது மரணத்திற்கு முழுக்காரணமும் தான் மட்டுமே என்று 2016 ஆம் ஆண்டு எதிரிசிங்க ஜயமான்னே என்ற முன்னாள் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டாராமே? அதன் பின்னர் விசாரனைகள் வேகவேகமாக இடம் பெற்றது. நானும் நினைத்தேன் இப்போது கொலையாளியை தேடிவிடுவார்கள் போலும் என்று சிரிக்கத்தான் முடிகின்றது. ஆனால் மாற்றுப்பக்கத்தில் ஒரு தேவையில் பொருட்டு கதையை உருவாக்கவும், திசைதிருப்பவும் இலங்கை அரசியல் கபடங்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
ஆனால் நிச்சயமாய் ஒன்றை கூற முடியும் எனது மரணமும், எனது பெயரும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு மிக அவசியமாய்தான் இருக்கின்றது. இதனை எந்த இடத்தில் தொடங்கி எந்த இடத்தில் எவர் முடிப்பது என்பதற்கு பதில்கள் கிட்டப்போவது இல்லை. இப்படியான நிலையில் உரிமை, நீதி, ஜனநாயகம் என்றெல்லாம் பேசி பேசி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதில் மாத்திரம் ஏராளம் பேர் வரிசையில் நிற்கின்றனர்.
ஐயாத்துரை நடேசன் (2004), தர்மரத்தினம் சிவராம் (2005), ரேலங்கி செல்வராஜா (அவரது கணவர்) (2005), சுப்பிரமணியம் சுகிர்தராஜன் (2006), கண்ணமுத்து அரசகுமார், டீ.செல்வரட்ணம், யோககுமார் கிருஷ்ணபிள்ளை மற்றும் கே.நவரட்ணம் (2005), சுரேஸ் குமார், ரஞ்ஜித் குமார், லக்மால் டி சில்வா ,எம்.மனோஜன்ராஜ், சதாசிவம் சின்னத்தம்பி சிவமகாராஜா (2006), சந்திரபோஸ் சுதாகரன், செல்வராஜா ரஜீவர்மன், சகாதேவன் நிலக்ஸன், சுப்பிரமணியம் இராமச்சந்திரன், வடிவேல் நிமலராஜ், சுரேஸ் லிம்பியோ, ரி.தர்மலிங்கம் (2007) பரநிருபசிங்கம் தேவகுமார் (2008), இவர்களின் பட்டியலில் நானும் இணைந்து விட்டேன். இந்தப்பட்டியல் இன்னும் இன்னும் நீளக்கூடும் இவையெல்லாம் எதற்கு?
எப்படிப்பார்த்தாலும் எனது பெயரில் மாத்திரம் அல்ல எலும்புக்கூட்டிலும் அரசியல் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அது சரி இந்த பாவங்களை எப்படி? எங்கு சென்று போக்கிக் கொள்ளப் போகின்றார்கள்? உண்மையில் நான் என்ன தவறு செய்தேன்? அதிகார வர்க்கத்திற்கு மனித உயிர் என்பது ஓர் பகடைக்காய் மாத்திரமே என்பதை எனது சாவில் இருந்தும் பாடங்களை கற்றுக் கொள்ளாத நாட்டில்தான் இன்னும் உரிமைகள் பற்றி பேசப்படுகின்றது. ஒன்று நிச்சயம் எனது ஆத்மா கூட நிம்மதியடையாது, உறங்காது என்னை கொன்றவர்கள் தண்டிக்கும் வரை ஆனால் அதனை யார் செய்வது?
இறந்தும் அல்லல் படும் நான் லசந்த. உண்மையில் என்னை கொன்றது யார் நான் சொல்லட்டுமா?