கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தைப்புலி! காவல்துறை விசேட நடவடிக்கை
பொகவந்தலாவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் மேற்பிரிவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தைப்புலியொன்றின் உடல் மீட்க்கப்பட்டுள்ளது.
தேயிலை தோட்டத்தில் மரத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி சிறுத்தைப்புலி உயிரிழங்திருக்கலாம் என நல்லதண்ணி வனஜீவராசிகள் தெரிவித்துள்ளார்.
தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளை சிறுத்தைப்புலியிடமிருந்து பாதுகாப்பதற்காக, இந்த கம்பி வலை அமைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
சிறுத்தைப்புலி (09) ஆம் திகதி இரவு கம்பி வலையில் சிக்கியதாகவும், தப்பிக்க முயன்ற போது அதன் கழுத்துப் பகுதி கம்பியில் இறுகப் பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று உயிரிழந்துள்ளதாக தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகம் மூலமாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தை பரிசோதித்த பொகவந்தலாவ காவல்துறையினர், அதே பகுதியிலேயே தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மேலும் பல கம்பி வலைகளை கண்டுபிடித்து அவற்றை அகற்றியுள்ளனர்.
உயிரிழந்த சிறுத்தைப்புலியின் உடல் ஹட்டன் நிதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், உடற்கூறு பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும், இந்த கம்பி வலைகளை அமைத்த சந்தேகநபர்களை கைது செய்ய பொகவந்தலாவ காவல்துறையின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |