அராஜக அரசாங்கத்தை தோற்கடிக்க ஒன்றிணைவோம்! நள்ளிரவில் தீப்பந்தத்துடன் போராட்டம்
அரசமைப்புச் சட்டத்தில் அரசாங்கத்திற்கு நீண்ட காலம் உள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு நீண்ட காலம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரி கொழும்பு - ரத்மலானையில் நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பு ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் அரசாங்கத்திற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ள போதிலும், அரசாங்கத்தை அகற்றுவதற்கு இந்த நாட்டு மக்கள் இவ்வளவு காலம் பொறுக்கமாட்டார்கள்.
தற்போதைய அராஜக அரசாங்கத்தை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்பக்கூடிய குழுவொன்றுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்
என்னிடம் உள்ள குழுவானது சிறந்த கற்றல் திறன் கொண்ட அனுபவமிக்கவர்கள் எனவும், நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.