ஆணைக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவரச கடிதம்
2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் மக்கள் கூட்டணி கட்சி தனது பெயர் மற்றும் படங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க (Chandrika Kumaratunga) தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.
அத்தனகல்ல பிரதேச சபையின் கீழ் வரும் பகுதிகளில், நாற்காலி சின்னத்தின் கீழ் போட்டியிடும் மக்கள் கூட்டணி தனது பெயர் மற்றும் படத்தைக் கொண்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களைப் பயன்படுத்தியிருப்பது தனது கவனத்திற்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது பெயரையோ அல்லது புகைப்படங்களையோ பயன்படுத்தவேண்டாம் என்றும், கட்சியுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த கட்சிக்கு ஏற்கனவே அவர் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்ட மீறல்
எனினும், தேர்தல் பிரச்சாரத்திற்காக குறித்த கட்சி தனது பெயர் மற்றும் படத்தையும் தொடர்ந்து பயன்படுத்துவதால், இது தேர்தல் சட்டங்களை மீறுவதாக சந்திரிகா குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த நடவடிக்கையை நிறுத்தி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் முன்னணியின் தொடர்புடைய தலைவர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி தேர்தல் ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
