உறவைப்பாதிக்கும் - சீனாவிடமிருந்து இலங்கைக்கு வந்த காட்டமான கடிதம்?
தமது நாட்டு நிறுவனமொன்றிடம் இருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த உரத்தை நிராகரித்திருப்பது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கும் என்று சீனத் தூதுவர் விவசாய அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
குறித்த கடிதத்தில் உரம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணிகள் மற்றும் இத்தகைய நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கிடையேயான நட்பை எவ்வாறு பாதிக்கும் என்பன குறிப்பிட்டுள்ளது.
நம்பிக்கையை நிலைநாட்ட இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அந்த கடிதம் கேட்டுக் கொண்டுள்ளது. சீன தூதரகத்தின் கடிதத்திற்கு பதிலளித்ததாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) கூறினார்.
சீன நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த உர மாதிரிகளை நிராகரிக்க வழிவகுத்த தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து சீன தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், ஒரு சீன நிறுவனத்திடமிருந்து மற்றொரு உர மாதிரியை இறக்குமதி செய்து சோதனை செய்ய விவசாய அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நிறுவனத்தில் இருந்து முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட உரத்தின் இரண்டு மாதிரிகள் தாவர தனிமைப்படுத்தல் சேவையால் சோதிக்கப்பட்டு, சாகுபடிக்கு தகுதியற்றவை என உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.