பெருமளவான கசிப்பு உற்பத்தி நிலையங்களை முற்றுகையிட்டது மதுவரி திணைக்களம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவரித்திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகளில் பெருமளவான கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் கடந்த ஒரு மாதகாலமாக முன்னெடுக்கப்பட்ட இந்த முற்றுகையில் 16 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதாகவும் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் எஸ்.ரஞ்சன் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்கோன் தலைமையில் இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை,வாகரை,செங்கலடி மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது போதைப்பொருள் விற்பனை மற்றும் உற்பத்தி ஆகியவை தொடர்பில் 94 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதத்தின் போது 16கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்த பொருட்களும் பெருமளவான கசிப்பும் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கசிப்பு விற்பனை செய்த 47 பேருக்கும் சட்ட விரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட 12பேருக்கும் சட்ட விரோத பியர் விற்பனை செய்த 11பேருக்கும் சட்ட விரோத கள்ளுவிற்பனை செய்த 04பேருமாக எல்லாம் 94வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.




