சட்டவிரோத வாகன இறக்குமதி: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டிற்கு சட்டவிரோத வாகன இறக்குமதியில் ஈடுபட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள (Department of Motor Traffic) அதிகாரிகளை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு (Colombo) பிரதான நீதவான் திலின கமகே (Thilina Gamage) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,10 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான வரிப்பணம், அரசுக்கு கிடைப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் செயற்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
300 மில்லியனுக்கு அதிகமான வரி
அதன்படி, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தகவல் அமைப்பில் சட்டவிரோதமாக தரவுகளை பதிவிட கூறிய அனைத்து அதிகாரிகளையும், அவற்றை பதிவு செய்த அதிகாரிகள் மற்றும் சட்டவிரோதமாக இந்த வாகனங்களை இறக்குமதி செய்த அதிகாரிகளையும் கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு 300 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான வரிப்பணத்தை கிடைக்கச் செய்யாத வகையில் இறக்குமதி செய்யப்பட்ட 100 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு ஜீப் வண்டிகளை கைப்பற்றுமாறும் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுங்கப் பணிப்பாளர்
அத்துடன் அவற்றை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்குமாறும் கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த ஆறு வாகனங்களும் தற்போது காலி, அவிசாவளை, குருவிட்ட, திருகோணமலை மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு சொந்தமானவை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, நீதிமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |