இலங்கையில் தடைசெய்யப்பட்ட சொல்லாக லொக் டவுன்! கெஹெலிய வெளியிட்ட தகவல்
லொக் டவுன் (முடக்கம்) என்ற சொல்லை தடை செய்யப்பட்ட சொல்லாக பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வைரஸ் ஒன்றினால், நாட்டிற்கு இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும் என்பதனை தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
இந்த வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில், லொக் டவுன் என்ற சொல்லை, தடை செய்யப்பட்ட சொல்லாக்குவதற்கு சுகாதார அமைச்சர் என்ற விதத்தில் தீர்மானித்துள்ளேன்.
நாட்டை முடக்குமாறு அனைவரும் கூறுவதானது, மிகவும் இலகுவான விடயம். நாடு முடக்கப்பட்ட போதிலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை ஒரு ரூபாவினாலேனும் குறைக்கவில்லை.
உலக நாடுகள் இவ்வாறான நிலைமையை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், தம்மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை பொறுத்துக் கொண்டு, நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்கின்றோம்.
5000 ரூபா வீதம், மூன்று தடவைகள் தமது அரசாங்கம் மக்களுக்கு நிவாரண உதவித் திட்டத்தை வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.