தமிழ் அரசியல் கைதிகள் அச்சுறுத்தல் வெளிவரவுள்ள விசாரணை அறிக்கை - சிக்குவாரா லொஹான் ரத்வத்த?
தமிழ் அரசியல் கைதிகளை முன்னாள் சிறைத்தறை இராஜாங்க அமைச்சர் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு(HRCSL) விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த சில நாட்களில் சிறைத்துறை ஆணையாளர் நாயகம் உட்பட பல சிறை அதிகாரிகளிடமிருந்து ஆணைக்குழு அறிக்கைகளைப் பெற்றுள்ளது.
எனினும்,சம்பவத்திற்கு பொறுப்பான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த,(Lohan Ratwatte) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வியாழக்கிழமை வாக்குமூலம் அளிக்குமாறு அழைக்கப்பட்டார். ஆனால் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக மற்றொரு திகதியை கோரியிருந்தார். அதன்படி, அவர் இந்த வாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உரிய அறிக்கையை அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை ஆணையத்தின் அதிகாரி ஒருவர், இராஜாங்க அமைச்சரின் அறிக்கையைப் பெற்ற பின்னர், இந்த சம்பவம் குறித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.