தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய “மனித நேய ஈருருளிப் பயணம்” 6ஆவது நாளாக தொடர்கிறது
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைவேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் வாவ்ர், பெல்சியம் மாநகர சபையினைத் தொடர்ந்து நாமூர், பெல்சியம் ஊடாக இன்று 6ஆவது நாளாக (07) பயணித்துக்கொண்டு இருக்கின்றது.
சிறிலங்கா தொடர்பாக தவறான சித்தரிப்புகளைச் செய்யும் புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைகள் முறியடிக்கப்படவேண்டும் என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சா கோரிக்கை விடுத்துள்ள நிலையில்,
சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் நீதி கோரும் பரப்புரை செயற்பாடுகள் புலம்பெயர் நாடுகளில் இன்றும் நடத்தப்பட்டுள்ளன.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் லண்டன் முதல் ஜெனிவா வரையிலான மிதிவண்டிப் பயணம் இன்று தனது ஆறாம் நாள் பயணத்தை கடந்துள்ளது.
தமிழினஅழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணைகோரி நடத்தப்பட்டுவரும் இந்தப்பயணம் பிரித்தானியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் ஊடாக பயணம் செய்து இன்று பெல்ஜியத்தின் நகரங்களை கடந்துள்ளது.
இதேபோலவே பிரான்சில் உள்ளுராட்சி கட்டமைப்புகளை சந்தித்து தமிழினத்துக்கு நீதிகோரும் பரப்புரை செயற்பாடுகள் இன்று ஏழாவது நாளாக முலூஸ் பகுதியில் இடம்பெற்றிருந்தன.
தமிழ்பண்பாட்டு வலையம் மற்றும் அனைத்துலக உரிமைச் சங்கம் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் இந்தப் பயணத்தில் தமிழினப்படுகொலைக்குரிய சாட்சியப்பதிவுகள் காட்சிப்படுதப்பட்டு வருவது குறிப்பித்தக்கது.








