வவுனியாவில் போக்குவரத்து காவல்துறையினர் மீது மோதிய லொறியின் சாரதி கைது!
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறியின் சாரதி இன்று (24.01.2026) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டளையை மீறி பயணித்த சிறிய ரக லொறி ஒன்றை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
இதன்போது, குறித்த லொறியின் சாரதி பின்தொடர்ந்து வந்த காவல்துறை அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணொளி
இவ்வாறு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் பின்தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கிய போது அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு வீதியின் ஒரு ஓரத்தில் விழுந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மீது குறித்த லொறி மோதும் காட்சிகள் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்தது.
லொறியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டமையினால், லொறியை வீதியில் கைவிட்டு சாரதி அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் சந்தேகநபர் தப்பிச் சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இராணுவத்தினர் அவரைக் கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இரு காவல்துறை அதிகாரிகளும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் லொறியையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இரட்டை பெரியகுளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |