பழ நெடுமாறனின் சர்ச்சைப் பேச்சிற்கு பதிலடிகொடுத்த தாயக சிரேஸ்ட ஊடகவியலாளர்!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக தமிழ் நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் சர்ச்சைக் கருத்தொன்றை ஊடகங்கள் மத்தியில் பேசியுள்ளார்.
இவ்வாறான நிலையில், அவரின் சர்ச்சைப் பேச்சிற்கு, வட தாயகத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் அமிர்தநாயகம் நிக்ஸன், பதிலடி கொடுக்கும் வகையில், தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்த முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை இல்லாதொழிக்காமல், அவர்கள் கோரிய அரசியல் விடுதலையை (Political Emancipation) பெற்றுக் கொடுத்திருந்தால், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இன்று இந்தியாவுக்கு முழுமையான பாதுகாப்புக் கிடைத்திருக்கும்.
தமிழ் பேசும் தாயகத்திற்குள் நுழைந்த சீனா

2009 இன் பின்னர் அமெரிக்கா கூட பிராந்தியத்துக்குள் வலிந்து மூக்கை நுழைத்திருக்க வேண்டிய நிலையும் உருவாக்கியிருக்காது. தமிழ் பேசும் தாயகத்தில் சீனா ஆதிக்கம் செலுத்தியிருக்கவும் முடியாது.
அத்துடன் சிங்கள ஆட்சியாளர்களிடம் கையேந்தி, மேலும் விட்டுக் கொடுத்துச் சிங்கள இராஜதந்திரத்துக்கு அடிபணிந்திருக்க வேண்டிய அவமானம் இந்தியாவுக்கு ஏற்பட்டும் இருக்காது.
இந்தியா 1987 இல் கொண்டு வந்த பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைக் கூடத் தற்போது பௌத்த தேசியவாதம் ஏற்கவில்லை என்பதற்காகவும், புவிசார் அரசியல் - பொருளாதார தேவைகளுக்காக இலங்கைக்கு பில்லியன் கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுத்தும், சிங்களம் அடங்குவதாக இல்லை என்று புரிந்த நிலையிலும், தற்போது உண்மைக்கு மாறான (False propaganda) பிரசார உத்தியை இந்தியா கையாள ஆரம்பித்திக்கின்றது.
ஒழுக்க விதிகளைக்கடந்த தமிழ் நாட்டு ஊடகங்கள்

அதுதான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற பிரசாரம். இதனை இந்தியத் தொலைக்காட்சிகள் அதுவும் தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகள் ஊடக ஒழுக்க விதிகளைக் (Media Code of Conduct) கடந்து பிரசாரப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஆகவே இலங்கையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர உண்மைக்கு மாறான மிகவும் மலினமான (Contaminated Strategy) பிரசார உத்தி இந்தியாவுக்குத் தேவையா? ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நியாயமானது. (Freedom Struggle is Justified) அது பயங்கரவாதம் அல்ல என்று அமெரிக்க - இந்திய அரசுகளுக்கு ஏலவே அந்தப் புரிதல் இருந்தது.
ஆனாலும் புலிகளின் போராட்ட முறைகள் - மரபு வழி இராணுவ உத்திகள் (Methods of Fighting – Traditional military tactics) சர்வதேசத்துக்கு முன்னுதாரணமாக வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் 2009 இல் போராட்டத்தை இல்லாதொழிக்க வல்லரசுகள் அப்போது இலங்கைக்கு ஒத்துழைத்ததாகவே அன்று விமர்சனங்கள் எழுந்தன.
தமிழர் பகுதியில் இராணுவ கெடுபிடிக்கு வழி ஏற்படுத்தும் இந்தியா

அதன் வலியை இன்று இந்தியா அனுபவிக்கின்றது என்பது, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற பிரசாரத்தின் மூலம் பட்டவர்த்தனமாகிறது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறி தமிழர் தாயகப் பிரதேசங்களில் மற்றுமொரு இராணுவக் கெடுபிடி மற்றும் வேறு வகையிலான தமிழ் இன அழிப்புக்கும் இந்தியா வழி சமைக்கிறதோ என்ற ஒரு சந்தேகமும் தற்போது எழுகின்றது.
இப்படி எந்த அநியாயம் நடத்தாலும் சரி, இலங்கையில் தமக்கு அரசியல் - பொருளாதார லாபங்கள் கிடைத்தால் போதும் என்ற நோக்கில் இந்தியா எந்த அணுகுமுறைக்கும் கீழ் இறங்கிச் செல்லும் போல் தெரிகிறது இந்தப் பிரச்சார உத்தி.
வடஇந்தியா வழிபாட்டு முறைகளை தமிழர் பிரதேசங்களில் திணிக்க பா.ஜா.காவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட திரிபுபடுத்திய இராமாயண இதிகாசக் கதைகள் தமிழகத் தொலைக்காட்சிகளுக்குப் புரிந்திருந்தால், உண்மைக்கு மாறான அந்தப் பிரசார உத்திக்கு எடுபட்டிருக்கமாட்டார்கள்.
இந்திய நரித்தன உத்திக்கு (Fox strategy) பழ நெடுமாறன் பலியாகிவிட்டார். அதற்குள் காசி ஆனந்தன் வேறு.
தமிழகத்தின் சில தொலைக்காட்சிகள் இந்துத்துவ கொள்கையின் பிரகாரம் செயற்படுவதால், ஈழத்தமிழர்களுக்கு அவை சாதகமாக இருக்காது என்பது கூட பழ நெடுமாறான், காசி ஆனந்தன் ஆகியோருக்குப் புரியாமல் போன பரிதாபம் என்ன?” எனவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.