ஆபத்தில் சிக்கவுள்ள மகிந்தவின் குடும்பம்!
புதிய பயங்கரவாத தடைச் சட்டமானது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது விவாதத்திற்கு வரும்போது பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள மகிந்த குடும்பமே அதற்குள் சிக்கி சிறைக்கு செல்லும் நிலையேற்படலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (15-04-2023) கிளிநொச்சியில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த தடுத்த வாரங்களில் மிகமிக ஆபத்தான பயங்கரவாத தடைச்சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டு வரப்படும்போது அது விவாதத்திற்கு விடப்படும் அவ்வாறான நிலையில் அதற்கான பெரும்பான்மை தேவையாகும்.
ஜயவர்த்தனாவின் பயங்கரவாத தடை சட்டம்
இந்த நிலையில், இப்போது பெரும்பான்மை வாக்குகளை அளிக்கக்கூடிய மகிந்த ராஜபக்ச குடும்பமே இந்த சட்டத்துக்குள் அகப்பட்டு சிறை செல்லும் நிலை ஏற்படலாம்.
ஏற்கனவே ஜே.ஆர் ஜயவர்த்தனாவினால் நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை வைத்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்று குவித்தும் தள்ளியுள்ளது.
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் உள்ள எதிர்கால சிந்தனை வேறு, மகிந்த ராஜபக்ச குடும்பத்திடம் உள்ள எதிர்கால சிந்தனைகள் வேறு. அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டால் இந்த சட்டத்தைப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
மிக ஆபத்தான சட்டம்
ரணில் தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபராக வர வேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார். அவ்வாறான முயற்சிகளில் எந்த எந்த ஒரு தேர்தலையும் தற்போது நடத்துவதற்கு அவர் தயாராக இல்லை.
ஏற்கனவே இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் மிக மிக ஆபத்தான சட்டமாகவே இப் புதிய சட்டம் உள்ளது. தனிநபர் கருத்துச் சுதந்திரம் ஊடக சுதந்திரம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
