யார் வேண்டும் என்றாலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம்! மகிந்த ராஜபக்சவின் பதில்
யார் அரசாங்கத்தை விட்டு விலகினாலும் அரசாங்கம் கவிழாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பங்காளிக் கட்சிகளின் செயல்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறிய அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கத்தில் இருந்து விலகும் நோக்கம் இருந்தால், எந்த நேரத்திலும் அவர்கள் அந்த தீர்மானத்தை எடுக்க முடியும். அவர்களுக்கு அரசாங்கத்தில் இருந்து விலகும் தேவை இருந்தால், அவர்களை பலவந்தமாக வைத்திருக்கும் எந்த தேவையும் எனக்கில்லை.
யார் அரசாங்கத்தை விட்டு விலகினாலும் அரசாங்கம் கவிழாது. சிறிய கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து விலகி விடும் என்று எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றன.
எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். உலக சந்தையின் தற்போதைய நிலைமைக்கு அமைய பல நாடுகளில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிலைமையை நாடும் எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
இப்படியான சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்குமாயின் இலங்கையின் நிலைமையானது இதனை விட மிக மோசமாக இருந்திருக்கும் என்றார்.