மைத்திரிக்கு விழுந்த பலத்த அடி -அமைச்சராகிறார் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்
மற்றுமொருவருக்கு அமைச்சு பதவி
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனத்தின் போது துமிந்த திஸாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோருக்கும் அமைச்சரவை அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துமிந்த திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன ஆவார்.
எதிர்வரும் நாட்களில் 12 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், இவர்களைத் தவிர ஏனைய அமைச்சரவை அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரியின் எதிர்ப்பு
இதேவேளை முன்னர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட மகிந்த அமரவீர மற்றும் நிமால் சிறி பால டி சில்வா தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் இராஜாங்க அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்திருந்தனர்.
இதற்கும் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்ட மைத்திரி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்தார்.
இந்த நிலையிலேயே மற்றுமொரு சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சு பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.