பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கோர விபத்துக்கள் : மூவர் பரிதாபமாக உயிரிழப்பு
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி இரண்டு பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கண்டி - யாழ்ப்பாணம் A9 வீதியில் கெக்கிராவ வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 65 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மரதங்கடவல நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடந்த குறித்த பாதசாரிப் பெண் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த பெண் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கெக்கிராவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை - சியம்பலாண்டுவ வீதியில் 'மினிமரு சந்தி'க்கு அருகில், சியம்பலாண்டுவ நோக்கி மரக்கறி ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் எதிரே வந்த முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மற்றுமொரு விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தல்கஸ்பிட்டிய, ஹபலன்காவ பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறி சாரதி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இறக்காமம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வான் சாரதி கைது
காலி - கொழும்பு பிரதான வீதியின் ரன்தொம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலபிட்டிய நோக்கிப் பயணித்த வான் ஒன்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
அளுத்வல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 20 மணி நேரம் முன்