கைக்குண்டு வைத்திருந்த வழக்கில் சம்பத் மனம்பேரிக்கு பிணை!
கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிறிலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை வேட்பாளரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான சம்பத் மனம்பேரிக்கு தங்காலை மேல் நீதிமன்றம் இன்று (11) பிணை வழங்கியுள்ளது.
தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இந்த பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 250,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆயுதங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர் முதன்முதலில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பிணை மனு தாக்கல்
பின்னர் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையப்படுத்தப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைக்குப் பிறகு, மித்தெனியவில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டை காவல்துறையினர் மீட்டனர்.

இதையடுத்து, கைக்குண்டு தொடர்பான விசாரணை மித்தெனிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த பிணை மனு தங்காலை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |