மாங்குளம் வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் குற்றச்சாட்டுகள்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்டிருக்கின்ற கொரோனா சிகிச்சை நிலையத்தில் உரிய உணவுகள் வழங்கப்படுவதில்லை எனவும் வழங்கப்படுகின்ற உணவுகள் உண்ண முடியாது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி உள்ளதாகவும் நோயாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான கவனிப்பு இருக்குமெனில் தாம் குணமடைந்து வருவோமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றார்கள் அதிகரித்து வருகின்ற நிலைமையில் மாங்குளம் வைத்தியசாலையில் பல நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு வழங்குகின்ற உணவுகள் உரிய வகையில் இல்லை எனவும் அதனை உடனடியாக திருத்தித்தருமாறும் நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகவே அங்குள்ள வசதி வாய்ப்புகளை அதிகரிக்குமாறும் இவ்வாறு நிலமை இருந்தால் தமது நோய் மாறுமா? இவ்வாறான நிலைமை நீடித்தால் தாங்கள் நோயிலிருந்து குணமடைந்து வெளியேற முடியுமா? என்ற அச்ச சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அங்குள்ள நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கை தொடர்பில் அங்கு இருக்கின்றவர்களால் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அறிவிக்கப்பட்டும் இதுவரை எந்தவிதமான தீர்க்கமான முடிவுகள் எட்டப்படவில்லை எனவும், ஆகவே இந்த உணவு மற்றும் அங்குள்ள கண்காணிப்பு நடவடிக்கைகளை உரிய வகையில் மேற்கொண்டு தாம் நோயிலிருந்து குணமடைய ஆவண செய்யுமாறும் மாங்குளம் வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

