மன்னார் கடற்பரப்பில் மாயமான மீனவர்கள் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!
மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் வயது-19 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் அதே இடத்தைச் சேர்ந்த செந்தூரன் வயது-28 என்கின்ற இரண்டு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மீனவர்கள் கோந்தை பிட்டி கடலில் தமது படகை செலுத்தி தொழிலுக்குச் செல்ல சரி பார்த்துள்ளனர். இதன் போது மூன்று மீனவர்கள் உள்ளடங்கலாக 8 பேர் படகில் இருந்துள்ளனர்.
படகில் வெளி இணைப்பு இயந்திரத்தை இணைந்து படகை செலுத்தி பார்த்துள்ளனர். இதன் போது படகின் வெளி இணைப்பு இயந்திரம் திடீரென இயங்காத நிலையில் காணப்பட்டுள்ளது. இதன் போது காற்றின் காரணமாக படகு கடலில் சென்று கொண்டிருந்துள்ளது.
படகின் முன் அணியத்தில் நின்ற ஒருவர் திடீரென கடலில் வீழ்ந்து கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றைய மீனவர் அவரை காப்பாற்ற கடலில் குதித்துள்ளார். எனினும் குறித்த மீனவரும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.
எனினும் ஏனையவர்கள் போராடியும் குறித்த இருவரையும் மீட்க முடியவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர் படகின் வெளி இணைப்பு இயந்திரம் இயங்கிய நிலையில் இவர்கள் கரை திரும்பி ஏனைய மீனவர்களின் உதவியுடன் தேடியுள்ளனர்.
எனினும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மீனவர்கள் மீட்கப்படவில்லை. இன்று திங்கட்கிழமை காலை முதல் மீனவர்கள் கடலில் தேடுதல் மேற்கொண்டனர். இதன் போது கோந்தை பிட்டி கடலில் இருந்து சற்று தொலைவில் தர்ஷன் வயது-19 என்பவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீனவர்களால் மீட்கப்பட்டு கோந்தைப்பிட்டி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
மற்றைய மீனவரை மீனவர்கள் தேடி வருகின்றனர். மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.