மன்னாரில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள கிராமங்கள்!
நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களிலும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
அதன்படி, இவ்வாறு தொடர்ச்சியாக காற்றுடன் மழை பெய்து வருகின்றமையினால் மக்கள் இடம்பெயர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்,நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்தார்.
கனமழை
மேலும் தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக ஆற்று நீர் மட்டம் உயர்ந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனடிப்படையில், மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பாதிப்புகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுமாறும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.
காற்றின் வேகம் தொடர்ச்சியாக உயர்வாக காணப்படுவதனால் கடற்கரை ஓரங்களில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் முப்படையினர் ஈடுபட்டுள்ளதோடு, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மாவட்ட செயலகத்துடன் இணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, மன்னார் பிரதான பாலத்தில் வெள்ள நீர் காணப்படுவதனால் மன்னார் நகரிலிருந்து அவசிய தேவை இன்றி பயணிப்பவர்களை இராணுவத்தினர் மன்னார் பிரதான பால நுழைவு பகுதியில் வைத்து திருப்பி அனுப்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
[N8RHBBJ ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








