மடு, கோயில்மோட்டை விவசாயிகள் வழங்கிய புகாருக்கு உடனடி தீர்வு
மன்னார் - பாலம்பிட்டி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கொழும்பிலிருந்து விரைந்த அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
பாலம்பிட்டி கமநல சேவைகள் நிலையத்தில் நேற்றையதினம் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.
உரம் வழங்காமை, குளத்தின் துருசு சாவியை பறித்தமை, தண்ணீர் இல்லாமல் பயிர் கருகும் நிலையில் இருக்கின்ற போதும் கிணறு அல்லது குழாய் கிணறு அடித்ததை தடுத்தமை போன்ற காரணங்களை குறிப்பிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு மடு, கோயில்மோட்டை விவசாயிகளால் இலங்கை கமநல அபிவிருத்தி ஆணையாளர் - அபிவிருத்தி பிரிவு அபேரத்ன அவர்களுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது.
குறித்த கடிதத்தினையடுத்தே கமநல அபிவிருத்தி ஆணையாளர் - அபிவிருத்தி பிரிவு அதிகாரிகளால் இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த விசாரணையின் போது ஆளுநர் உத்தரவிட்டும் எங்களுக்கு பணத்திற்கு கூட உரம் வழங்காமல், வேறு பகுதியிலுள்ளவர்களுக்கு விற்பனை செய்தனர், பயிரை கருக வைக்கும் நோக்கில் வேண்டுமென்றே துருசு சாவியை பறித்தார்கள், என கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் மற்றும் பாலம்பிட்டி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மீதும், கோயில் மோட்டை விவசாயிகள் குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.
அத்துடன் மூன்று வருடங்களாக நாங்கள் கேட்டுவரும் தனியான விவசாய அமைப்பை உருவாக்கித்தரவேண்டுமென்றும், அங்குள்ள கிணறொன்றை தூருவாரவும், புதிதாக கிணறுகளை அமைக்கவும் அனுமதியை பெற்றுதருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பான பதில்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கேட்டறிந்த கொழும்பிலிருந்து சென்ற கமநல அபிவிருத்தி ஆணையாளர் - அபிவிருத்தி பிரிவு அதிகாரிகள், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் மற்றும் பாலம்பிட்டி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மக்களுக்காக செயற்படுமாறும் மீறும் பட்ஷத்தில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்ததுடன், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படியும் பணிப்புரை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து நேற்றையதினம் மாலை பாலம்பிட்டி கமநல சேவைகள் நிலையத்தின் விவசாய ஆராய்ச்சி உதவியாளர், உங்களுக்கான உரத்தை வழங்குவதாக கோயில் மோட்டை விவசாயிகளுக்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.
நேற்று விடுமுறை தினம் என்பதையும் பொருட்படுத்தாது விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு ஒரு நெல் பயிர்கூட கருகக்கூடாது என்ற எண்ணத்தில் விரைந்து செயற்பட்ட இலங்கை கமநல அபிவிருத்தி ஆணையாளர் - அபிவிருத்தி பிரிவு அபேரத்னவுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் கோயில் மோட்டை விவசாயிகள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்விசாரணைகளின் போது பாலம்பிட்டி கமநல சேவைகள் நிலையத்திற்கு வந்து கோயில் மோட்டை விவசாயிகள் போன்று அதிகாரிகளை காப்பாற்ற முயன்ற பெரியபண்டிவிரிச்சான் - மேற்கு விவசாய அமைப்பின் தலைவர் சூசைப்பிள்ளை இக்னேஷியசை கமநல அபிவிருத்தி ஆணையாளர் - அபிவிருத்தி பிரிவு அதிகாரிகள் குறித்த அலுவலகத்தின் வளாகத்திலிருந்தே வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது.